தென்தமிழீழத்தின் தமிழர்பிரதேச இருப்பை காப்பாற்றுவேன்! த.தே.கூட்டமைப்பின் வேட்பாளர் பொறியியலாளர் கலாநிதி கணேஸ் கூறுகிறார்.


















தென்தமிழீழம் எனப்படும் அம்பாறை மாவட்டத்தின் தமிழர் பிரதேசம் கடந்த 72வருடகாலமாக பலவழிகளாலும் புறக்கணிக்கப்பட்டு அபகரிக்கப்பட்டு சீரழிக்கப்பட்டு சிதைந்துபோயுள்ளது. அதனைச்சீர்செய்து இருப்பைக் காப்பாற்றுவதே எனது இலட்சியமாகும்.

இவ்வாறு கூறுகிறார் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் திகாமடுல்ல மாவட்ட வேட்பாளர் பொறியியலாளர் கலாநிதி செல்வராஜா கணேஸ்.

கடந்த 13வருடங்களாக மாணவர் மீட்புப்பேரவை என்ற சமுகஅமைப்பினூடாக கல்விச்சேவை தொடக்கம் சமுகசேவையாற்றிவரும் கலாநிதி கணேஸ் ஜ.நா. வரை சென்று தமிழ்மக்களின் உரிமைகளுக்காக குரல்கொடுத்தவர்.

மூன்று மொழிகளிலும் பாண்டியத்தியம்பெற்ற அனுபவம் வாய்ந்த இளம் வேட்பாளர் கலாநிதி கணேஸ் எமது வாசகர்களுக்காக இந்தச் செவ்வியை வழங்கினார்.

வினா: இதுவரை கல்விச்சேவையில் தடம்பதித்து வந்த நீங்கள் அரசியலுக்குள் பிரவேசிக்கக் காரணம் என்ன?

விடை: வணக்கம். என்னதான் சமுக கல்விச்சேவைகளைச்செய்து வந்தாலும் கண்முன்னே இடம்பெற்றுவரும் நிலஅபகரிப்புகளையோ எமதினம் ஏனையோரிடம் கையேந்துவதையோ தடுக்கமுடியாதுள்ளது. அதற்கு அரசியல் அதிகாரம் இன்றியமையாதது.

அந்த அரசியல் ஆளுகையைப் பெற்றால் அதிகாரத்துடன் மக்களின் இருப்பை நிலைநாட்டமுடியும் என்ற நம்பிக்கையில் அரசியலில் பிரவேசித்தேன். 

சுருக்கமாகக்கூறினால் அடக்கி ஒடுக்கப்பட்ட ஓரு சமுகத்தின் அழுகுரலே எனது அரசியல் பிரவேசத்திற்கான காரணம்.

வினா: தாங்கள் அதிவீரமாக தமிழர்வாழ்விடங்களில் அதிக செல்வாக்குப் பெற்றுவரும் இன்றையநிலையில் தங்களைப்பற்றி சற்றுகூறுங்கள்?

விடை: நான் நாவிதன்வெளிப்பிரிவிலுள்ள சவளக்கடையைப் பிறப்பிடமாகக்கொண்டவன். 1990 வன்செயலை நேரடியாகக்கண்ணுற்றவன். இவ்வன்செயலில் பெரிதும் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து கல்முனையில் குடியேறி அண்மையில் திருமணமாகி வாழ்ந்துவருகிறேன்.

வினா: ஜ.நா. மாநாட்டுக்குச்சென்றதன் பின்னணி பற்றிக் குறிப்பிடுவீர்களா?
விடை: ஆம் 2016முதல் ஜ.நா.மாநாடுகளில் பங்குபற்றிவந்துள்ளேன். இறுதியாக நான் ஜ.நா. மனிதஉரிமைகள் 43வது அமர்வில் பங்குபற்றி கிழக்குமாகாண தமிழ்மக்கள் சார்பாக குரலெழுப்பினேன்.

பிரதான மண்டபத்தில் 2நிமிடம் உரையாற்றக் கிடைத்ததை பெரும்பேறாகக் கருதினேன். அதேவேளை அதன்பின்னர் கூட்டமண்டபத்தில் பல்நாட்டு இராஜதந்திரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தமுடிந்தது.


வினா: அரசியலில் நீங்கள் த.அ.கட்சியுடன் இணைந்து பயணிக்க ஏதுவாயிருந்த காரணங்கள் என்ன?

விடை: தமிழ்மக்களின் உரிமைப்போராட்டம் வலுவானது. தமிழரசுக்கட்சியின் தாயகக்கோட்பாடு சுநிர்ணயம் தன்னாட்சி தேசியம் என்பவற்றை மையமாகக்கொண்டியங்கிவருகிறது. இவ்விரண்டும்தான் என்னை த.அ.கட்சியின்பால் ஈர்த்தது எனலாம்.

வினா: நீங்கள் போட்டியிடும் த.தே.கூட்டமைப்பால் கடந்த காலங்களில் அம்பாறை மாவட்டத்து தமிழ்மக்களின் அபிலாசைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகக்கருதுகிறீர்களா?

விடை: திருப்தி என்று கூறமுடியாது. நாம் உரிமை சார்ந்து இயங்க ஏனையோர் அபிவிருத்தி சார்ந்து இயங்கினார்கள்.கடந்தகாலங்களில் சரியான தலைமைத்துவங்கள் இல்லாமையினால் தடுமாற்றம் அடைந்ததொன்றும் தெரியாததொன்றல்ல. இனி அதைப்பேசிப் பலனில்லை. எனது வியுகம் வேறு. அதனூடாக வெற்றிகாண்பேன்.

வினா: கடந்தகால தேர்தல் விஞ்ஞாபனம் ஒரு வெற்று கோசம்.அதிலுள்ள ஒரு உறுதிமொழியையும்; நிறைவேற்றவில்லை என்ற பாரிய குற்றச்சாட்டும் வெறுப்பும் தமிழர் மத்தியில் நிலவுகிறது. மக்களை கேணயனாக ஏமாற்றியதாகவும் கூறப்படுகறது. இவ்வேளையில் தங்கள் விஞ்ஞாபனம் எவ்வாறமையும்?

விடை: தாங்கள் கூறியதுபோன்று அந்த அதிர்வலைகள் தமிழ்மக்கள் மத்தியிலிருப்பதை நானறிவேன். எனது தேர்தல் விஞ்ஞாபனம் 'நான் எனும் நீங்கள்' எனும் மகுடத்தின்கீழ் சமுகம் கல்வி பொருளாதாரம் என்பவற்றை மையமாகவைத்து தயாரிககப்பட்டுள்ளது. விரைவில் வெளியிடவுள்ளேன்.

வினா: 'நான் எனும் நீங்கள்' எனும் வி;ஞ்ஞாபனமும் பத்தோடு பதினொன்றாக எவ்வித பயனுமில்லாமல் போகுமா? அல்லது எதையாவது நடைமுறைப்படுத்த உரிய திட்டமுள்ளதா?

விடை: எனது விஞ்ஞாபனம் வெறுமனே மக்களை ஏமாற்றுவதற்காக தயாரிக்கப்பட்டதொன்றல்ல. புத்திஜீவிகள் துறைசார்ந்தவர்களைக்கொண்டு தயாரிக்கப்பட்டது. 5வருடங்களுக்காக தயாரிக்கப்பட்டாலும் ஒவ்வொரு வருடமும் அதன் முன்னேற்றம் ஆராயப்பட்டு பரிசீலிக்கப்பட்டு முன்னெடுக்கப்படும். சாத்தியமானவற்றை மட்டுமே உள்ளடக்கப்பட்டுள்ளன.

வினா: மூவினமும் வாழும் அம்பாறை மாவட்டத்தில் இம்முறை தமிழர் பிரதிநிதித்துவம் காப்பாற்றப்படும் என்று நம்புகிறீர்களா?
விடை: நிச்சயமாக .எமது தமிழ்மக்கள் தேசியத்தின்பால் பற்றுறுதிகொண்டவர்கள். நன்குகற்றவர்கள். 

அவர்களுக்கு நல்லது கெட்டது பிரித்துப்பார்க்கத்தெரியும். அவர்கள் த.தே.கூட்டமைப்பிற்கு வாக்களித்துத்தான் பழக்கமே தவிர எட்டப்பர்களுக்கும் அரச ஏஜண்டுகளுக்கும் வாக்களிக்கமாட்டார்கள். 

எத்தனைபேர் போட்டியிட்டாலும் எமது த.தே.கூட்டமைப்பிலிருந்துதான் பிரதிநிதி தெரிவாவது நிச்சயம். கடந்ததடவை 45512வாக்குகள் எமது கட்சிக்கு கிடைத்தது. இம்முறை அதைவிடக்கூடுதலாகக்கிடைக்கும்.அதில் துளியளவு கூட சந்தேகமில்லை.

வினா: யுத்தம் தொடர்பில் சர்வதேசமூடாக தமிழர்க்கு நீதி கிடைக்குமென நம்புகிறீர்களா?
விடை: நிச்சயமாக. நீதிப்பொறிமுறை அப்படி இருக்கிறது.


வினா: நீங்கள் வெற்றியடையும் பட்சத்தில் என்னென்ன செயற்பாடுகளை மேற்கொள்ளவிருக்கிறீர்கள்?
விடை: நான் வெறுமனே அரசை மட்டும் நம்பியிருக்கப்போவதில்லை. புலம்பெயர் தமிழ்அமைப்புகளுடன் தொடர்புகொண்டு அபிவிருத்தித்திட்டங்களை முன்வைத்து செயற்படுத்துவேன். மேலும் இலங்கையிலுள்ள வெளிநாட்டுத் தூதரகங்களுடன் பேசுவேன். 

அதற்காக அம்பாறை மாவட்டத்திலுள்ள புத்திஜீவிகளை துறைசார் நிபுணர்களை இணைத்து ஒரு ஆலேசனைக்கட்டமைப்பை உருவாக்கி முன்னெடுப்பேன். குறிப்பாக கல்விக்கு முக்கியத்துவம் வழங்குவேன்.

வினா: த.தே.கூட்டமைப்பின் வெறுப்பு வாக்குகள் எதிரணி வேட்பாளர் கருணாவிற்கு விருப்புவாக்குகளாக அமையாது என நீங்கள் கருதுகிறீர்களா?
விடை: கடந்தகால செயற்பாடுகளால் வெறுப்பலைகள் சிறியளவிலிருப்பது பெரிதல்ல. அதற்காக அவை எமது விருப்புவாக்குகளுக்கு எவ்விதத்திலும் தடையாக அமையாது.

வினா: பொத்துவில் கனகர் கிராமமக்களின் போராட்டம் 2வருடங்களை நெருங்குகிறதே. தங்கள் கட்சிக்கு வாக்களித்த அந்த மக்களுக்கு கட்சிக்காரர்கள் இதுவரை செய்ததென்ன?

விடை: அந்த மண்மீட்புப்போராட்டத்திற்கு ஆரம்பமுதல் இதுவரை சகலவித உதவிகளையும் செய்துவருவது பலருக்குத்தெரியாது. இன்று அது 90வீத வெற்றியைக்கண்டுள்ளது. 

நான் அடிக்கடி சென்று வருவதுண்டு. இறுதியாக அரசஅதிபருடன்பேசி முடிவுக்குகொண்டுவர உதவியுள்ளேன். கட்சிக்காரர் பற்றி நான்எதுவும் கூறவிரும்பவில்லை.

வினா: அரசின் பல அபிவிருத்தித்திட்டங்கள் தமிழ்மக்களுக்குக் கிடைக்கவில்லையென குற்றம் சாட்டப்படுகிறதே? அதுபற்றிக்கூற முடியுமா?
விடை: உண்மை.

 அதாவுல்லா ஹரீஸ் பைசால்காசிம் போன்றவர்களால் முன்னெடுக்கப்பட்டுவந்த இனத்துவேச அரசியலின் வெளிப்பாடுகளே அவைக்குக்காரணம். 

அதற்கு எமது அரசியல் போக்கும் மறு காரணமெனலாம். இன்று அது புதியவடிவம் எடுக்கவுள்ளது.

வினா: உங்களிடம்தான் ஏராளமான இளைஞர் பட்டாளங்கள் உளளதாகக்கூறப்படுகிறது. 

அலைஅலையாய் இளைஞர்கள் அணிதிரள்வதாகக்கூறப்படுகிறது. 

ஆகவேதான் இளைஞரான தங்களை கட்சி இறக்கியதாக சொல்லப்படுகிறது. இது உண்மையா? அப்படியெனின் அவர்களுக்கு நீங்கள் காட்டும் வழி என்ன?
விடை: எனது தேர்தல் மகுடவாக்கியம் என்னவென்றால் 'இளைஞர்களின் உத்வேகமும் முதியோர் ஆலோசனைகளுமே எனது திண்ணம் 'என்பதாகும். எனவே அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த அவர்களை முன்னோர் நடுத்தெருவில் விட்டதுபோன்று கைகழுவிவிடமாட்டேன். அவர்களுக்கென தனியான திட்டமொன்றுள்ளது. அது விஞ்ஞாபனத்தில் வரும்வரைகூறமுடியாது. கட்சி என்னில் நம்பிக்கைவைத்து இறக்கியுள்ளது. அதற்க விசுவாசமாகப்பயணிப்பேன்.

வினா: உங்களிடம் கட்சிதலைமைகள் பற்றியோ தேசியஅரசியல் பற்றியோ பேசவேண்டிய அவசியமில்லாத போதும் அம்பாறை மாவட்டத்தில் நீங்கள் எம்.பியானால் உங்கள் கட்சிசார்ந்த மாவட்ட அணுகுமுறைகள் எவ்வாறமையும் எனக்கருதுகிறீர்கள்?
விடை: அது எனது ஆளுகைக்குள்தான் அமையும். அப்போது அது தெரியவரும்.

வினா: சமகால கணிப்புகள் தங்களின் வெற்றியையே உறுதிப்படுத்திநிற்பதாக மக்கள் கூறுகின்றனர்.

 எனவே இறுதியாக அந்த மக்களுக்கு என்ன சொல்லவிரும்புகிறீர்கள்?
விடை: நான் எப்போதும் உயிரினும் மேலாக நேசிக்கின்ற தமிழ்மக்களே.

 உங்களோடு ஒன்றாக இன்பத்திலும் துன்பத்திலும் இணைந்து பயணித்துவந்திருக்கிறேன். என்றும் பயணிப்பேன்.

 தேர்தலுக்கு மட்டும் வந்துவிட்டு பின்னர் காணாமல்போகும் பிறப்பு இது இல்லை. வெறும் நிறைவேற்றமுடியாத வாக்குறுதிகளை தந்து ஏமாற்றுபவன் நானல்ல. செய்வதையே சொல்வேன்.

 சொல்வதைச் செய்வேன். அது எனது கொள்கை. எனவே இன்றும் என்றும் நாம் அனைவரும் மனதார விரும்பும் வீட்டுச்சின்னத்திற்கு முதலில் வாக்களித்து பின்னர் எனது 10ஆம் இலக்கத்திற்கு வாக்களித்தால் நம்மனைவரது வாழ்வும் வளம்பெறும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :