தமிழ்மக்களின் உணர்வுகளுக்கேற்ப கூட்டமைப்பு மாறவேண்டும்! த.தே.கூட்டமைப்பில் வெற்றிபெற்ற கோ.கருணாகரம் (ஜனா) கூறுகிறார்.


டந்துமுடிந்த தேர்தலில் தமிழ்மக்களின் ஆணை என்பது மாறுபட்டிருக்கிறது. அதாவது தமிழ்மக்கள் இன்று வித்தியாசமானவிதத்தில் சிந்தித்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களின் உணர்வலைகளுக்கேற்ப தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு தமது பாதையை மாற்றிக்கொள்ளவேண்டும். அது காலத்தின் கட்டாயம். மாறாவிட்டால் காலவோட்டத்தில் தூக்கிவீசப்படும் துர்ப்பாக்கியநிலை தோன்றலாம்.
தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் சார்பில் மட்டு.மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றியீட்டிய ரெலோ கட்சியின் பொருளாளரான கோவிந்தன் கருணாகரம்(ஜனா) மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ரெலோ என அழைக்கப்படும் தமிழீழ விடுதலைக் கழகத்தின் நீண்டகால போராளியான 'ஜனா' என அழைக்கப்படும் கோவிந்தன் கருணாகரம் இரண்டாவது தடவையாக பாராளுமன்றிற்குத் தெரிவாகியுள்ளார்.
இந்தத்தேர்தலில் 26382 வாக்குகளைப்பெற்ற அவர் ஏலவே கிழக்கு மாகாணசபை உறுப்பினராகவும் பாராளுமன்ற உறுப்பினராகவும் பதவிவகித்தவராவார்.
அவரது சேவையின் காரணமாக மக்கள் மத்தியில் மிகுந்த செல்வாக்கைப்பெற்ற அவர் மக்களுக்காக இலவச பிரேதஊர்தி சேவையை நடாத்திவருகிறார்.
அவர் இரண்டாவது தடவையாக பாராளுமன்றம் செல்லவிருக்கின்றநிலையில் அவர் அளித்த செவ்வியை வாசகர்களுக்காகத் தருகிறோம்.

கேள்வி: தாங்கள் சார்ந்த த.தே.கூட்டமைப்பு வடக்கு கிழக்கில் பாரியபின்னடைவைச் சந்தித்துள்ளதே. உங்கள் பேச்சாளர் சுமந்திரனும் பகிரங்கமாக ஏற்றுக்கொண்டிருக்கிறார். அது தொடர்பாக என்ன கூற விளைகிறீர்கள்?
பதில்: அது உண்மை. அதற்கு பல்வேறு காரணங்களைச் சொல்லலாம். மக்கள் ஒரு வித்தியாசமான பாதையை விரும்புகிறார்கள். உரிமையுடன் அபிவிருத்தியை கூடுதலாக நேசிக்கிறார்கள். எதிர்பார்க்கிறார்கள். இந்தநிலையில் நாமும் கூட்டமைப்பும் அலசிஆராய்ந்து பாதையை மாற்றமுற்படுவோம்.எதுஎப்படியிருப்பினும் இன்று த.தே.கூட்டமைப்பு தனது பாதையை மாற்றவேண்டிய கட்டாயத்திற்கு வந்துள்ளது.

கேள்வி: இதற்காக கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளுள் ஒன்றான ரெலோவின் பொருளாளர் என்றவகையிலும் புதிய பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையிலும் உங்களது ஆலோசனை என்ன?
பதில்: மிகவிரைவில் எமது கட்சியின் அரசியல்குழு கூடி அரசியல் தொடர்பிலும் கூட்டமைப்பின் எதிர்காலம் தொடர்பிலும் தமிழ்மக்களின் தற்போதைய நிலைமை தொடர்பிலும் ஆராய்ந்து தீர்மானமெடுத்து அதனை த.தே.கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழுவின் கவனத்திற்கு கொண்டுவந்து நடவடிக்கை எடுக்கப்படும்.

கேள்வி: த.தே.கூட்டமைப்பு சமகாலத்தில் பாரிய வாக்குச்சரிவை சந்தித்துள்ளது. அது தொடர்பாக..
பதில்: உண்மை.மட்டக்களப்பில் மாத்திரம் 50ஆயிரம் வாக்கு இழக்கப்பட்டிருக்கிறது. அம்பாறை திருகோணமலை மாவட்டங்களிலும் சுமார் 20ஆயிரம் வாக்குகள் சரிந்துள்ளன. மக்கள் உரிமையை மாத்திரமல்ல அபிவிருத்தியையும் விரும்புகிறார்கள் என்பது அதன்வெளிப்பாடு.எனது கணிப்பும் அதே. அதற்கமைய கூட்டமைப்பு சுயவிமர்சனம்செய்யப்பட்டு தனது பாதையை மாற்றவேண்டும்.

கேள்வி: இம்முறை த.தே.கூட்டமைப்பு ஆக 10ஆசனங்களைப் பெற்றுள்ளது. அதேவேளை தங்கள் ரெலோ கட்சி வன்னியில் 2ஆசனங்களையும் மட்டக்களப்பில் தாங்களுமாக மூவர் தெரிவாகியிருக்கிறீர்கள். இந்தநிலையில் என்ன கூறவிளைகிறீர்கள்?
பதில்: ரெலோவைப்பொறுத்தவரை கடந்ததடவை இருவர் தெரிவாகியிருந்தனர்.ஆனால் இம்முறை மூவர் தெரிவாகியுள்ளோம். இது எமக்கு கிடைத்த மக்கள்அங்கீகாரம்.

கேள்வி: அப்படியானால் மாவட்டரீதியில் கூட்டமைப்பிற்கு 9ஆசனங்கள் கிடைத்தன. அதில் 3ஆசனங்கள் தங்கள் பங்காளிக்கட்சிக்குரியது. எனவே இனிமேல் கூட்டமைப்பில் உங்களது வகிபாகம் வலுவானதாக இருக்குமா? அல்லது தொடர்ந்து வழமைபோல தமிழரசின் மேலாதிக்கத்திற்கு துணைபோவீர்களா?
பதில்: நல்ல கேள்வி. நாம் மூன்றிலொரு பங்கு அதிகாரத்திலுள்ளோம். எனவே எமக்கான பங்கு அதிகாரம் அதற்கப்பால் கூட்டமைப்பின் தீர்மானம் ஏனைய செயற்பாடுகளில் நாம் கணிசமான பங்கைவகிப்போம். முன்னர் இருந்ததுபோல தமிழரசு தன்னிச்சையாக செயற்பட அனுமதியோம்.

கேள்வி;: மட்டு.மாவட்டத்தில் தங்களுக்கு கட்சிக்குள்ளே குத்துவெட்டுக்கள் இடம்பெற்றதாக கூறப்படுகின்றதே..
பதில்: உண்மை. வெளியில் அந்த சூழ்ச்சி இடம்பெறவில்லை. எதிரி என்றால் தைரியமாக எதிர்கொள்ளலாம்.இது துரோகிகள். கட்சிக்குள்ளேயே பலத்த குத்துவெட்டு இடம்பெற்றன.பலத்த போராட்டத்தின்மத்தியில் வெற்றிபெற்றேன். சூழ்ச்சிகள் குத்துவெட்டுக்கள் அவற்றையும் தாண்டி என்னை மக்கள் தெரிவுசெய்துள்ளமை என்பாலுள்ள நம்பிக்கை.

கேள்வி : அதற்காக வாக்களித்த மக்களுக்கு என்ன சேவைசெய்யதி;ட்டமிட்டுள்ளீர்கள்?
பதில்: என்மீது நம்பிக்கைவைத்து வாக்களித்த மக்களுக்கு நன்றி செலுத்துவதோடு நின்றுவிடாமல் அவர்களுக்கான சேவையை நேரகாலம் பாராமல் செய்வேன்.குறிப்பாக மக்களுக்கான உட்கட்டமைப்பு உள்ளுர் அபிவிருத்திக்கு முன்னுரிமை வழங்கி தொழிலவாய்ப்பில்லாத முன்னாள் போராளிகள் பெண்தலைமைத்துவ யுவதிகள் ஏனையோருக்கும் தொழில்வாய்ப்புகளை வாழ்வாதாரத்தை வழங்க திட்டமிட்டுள்ளேன்.

கேள்வி: கடந்தகாலங்களில் கூட்டமைப்பு மக்களின் உணர்வுகளை மதிப்பதில்லை தன்னிச்சையாக தீர்மானங்களை நிறைவேற்றுவதெனவும் தங்கள் கட்சியைக்கூட மதிப்பதில்லை எனவும் ஊடகங்களில் பரவலாக குற்றம்சாட்டப்பட்டு வந்திருக்கின்றன. இதற்கு என்ன சொல்கிறீர்கள்?
பதில்: இதற்கான பதிலை இம்முறை மக்கள் தேர்தலில் சொல்லியிருக்கிறார்கள். கட்சிக்காக மக்களல்ல மக்களுக்காகவே கட்சி என்ற நிலை வரவேண்டும் என்பதே அனைவரதும் அவா. மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கவேண்டும்.

கேள்வி: இந்த தேர்தலில் அம்பாறை மாவட்டம் தமிழ்ப்பிரதிநிதித்துவத்தை இழக்கக் காரணம் யார்? என்று கருதுகிறீர்கள்.
பதில்: யார் காரணம் என்பதைவிட தமிழ்மக்கள் நிதானமாகச்சிந்தித்து வாக்களித்திருக்கவேண்டும். அம்பாறையில் ஒரு தமிழ் எம்.பிதான் வரலாமென்பதை அனைவரும் அறிவார்கள். எனவே மக்கள் ஏதாவது ஒரு தரப்பிற்கு ஒருமித்து வாக்களித்திருக்கவேண்டும்.கூட்டமைப்பில் வெறுப்பு என்றால் அடுத்த கட்சிக்கு ஒட்டுமொத்தமாக வாக்களித்திருக்கவேண்டும். அதைவிடுத்து வாக்குகளை சிதறடித்து நடுத்தெருவுக்கு வந்துள்ளனர். கவலைதான். 1994இல் நடந்ததுபோன்று நடந்துள்ளது. அதற்காக மக்களை மாத்திரம் குற்றம்சுமத்தவிரும்பவில்லை.கட்சிமீதுகொண்ட அதிருப்தி கடந்தகால உறுப்பினரின் செயற்பாடுகளும் காரணமாகலாம்.
கேள்வி: அப்படியெனின் இழப்பை ஈடுசெய்வதற்கு தேசியபட்டியலை வழங்கவேண்டுமென கோரிக்கை பரவலாக விடுக்கப்பட்டுள்ளதே. அது தொடர்பாக என்ன சொல்லவிளைகிறீர்கள்?
பதில்: இன்று வடக்கு கிழக்கில் தமிழ்பிரதிநிதித்துவம் இல்லாத மாவட்டமென்றால் அது அம்பாறை மாவட்டம்தான். எனவே நானும் எமது தலைவர் செல்வமும் கட்சிக்குக் கிடைத்த ஒரேயொரு தேசியப்பட்டியல் பிரதிநிதியை அம்பாறை மாவட்டத்திற்கு கட்டாயம் வழங்கவேண்டும் என ஆலோசனை வழங்கியுள்ளோம். நாம் மட்டுமல்ல மட்டக்களப்பு மாவட்ட தமிழ்மக்களும் இதே நிலைப்பாட்டிலுள்ளனர். இந்தவிடயத்தில் தமிழரசுக்கட்சி வழமைபோல தன்னிச்சையாக நடக்கவிடமாட்டோம். கடந்தகால பிரதிநிதிகள் விட்ட தவறுகளும் அவர்கள் நடந்துகொண்டமுறையுமே இம்முறை அந்தமக்கள் கருணாவுக்கும் ஏனையோருக்கும் வாக்களிக்கக்காரணம் .

கேள்வி: நீங்கள் இப்படிக்கூறுகிறீர்கள். வழமைபோல த.தே.கூட்டமைப்பு என்றபோர்வையில் தமிழரசுக்கட்சி மட்டும் முடிவெடுத்து அம்பாறை மாவட்டமல்லாத யாரையும் நியமிக்க முடிவெடுத்தால் என்ன செய்வீர்கள்?
பதில்: அப்படி அவர்கள் எங்களைவிட்டுச் செய்யமுடியாது. இந்தவிடயத்தில் தமிழரசுக்கட்சி வழமைபோல தன்னிச்சையாக நடக்கவிடமாட்டோம்.
கேள்வி:அம்பாறை மாவட்ட தமிழ்மக்களையிட்டு மிகுந்த உணர்வுடனிருப்பவர் நீங்கள். அவர்களுக்கு இந்ததருணத்தில் என்ன கூறவிரும்புகிறீர்கள்?
பதில் : அம்பாறை வாழ் எனதினிய தமிழ்மக்கள் பலவழிகளிலும் கடந்த காலங்களில் பாதிக்கப்பட்டவர்கள். ஆயுதரீதியாகவும் இனரீதியாகவும் பலத்த பாதிப்பை எதிர்கொண்டவர்கள். பல தமிழ்கிராமங்கள் பறிபோயுள்ளன. அவர்கள் மனங்களில் நான் குடியிருப்பவன். அவர்களும் அப்படியே. அவர்களுக்கு உரிய சேவைகள் செய்யப்படவில்லை. எனவே எனது சேவையின் ஒரு பகுதியை அவர்களுக்கு கட்டாயம் செய்வேன்.

கேள்வி: தங்கள் கட்சியிலிருந்து பாராளுமன்ற உறுப்பினரான கோடீஸ்வரன் சகோதரக்கட்சி தாவியபோது தாங்கள் எடுத்த நடவடிக்கை என்ன?
பதில்: அதனை நான் வன்மையாக கண்டித்தேன். ஒருபோதும் நான் ஏற்றுக்கொள்ளவில்லை. கட்சியும் கண்டித்தது.இச்செயலால் கூட்டமைப்பிற்குள் தமிழரசுக்கட்சி ஜனநாயகமரபை மீறியிருந்தது.

கேள்வி: த.தே.கூட்டமைப்பில் பங்காளிக்கட்சியாக இருக்கிறீர்கள். கூட்டமைப்பிற்குள் ஜனநாயகம் இல்லை என்றும் சொல்கிறீர்கள். அப்படியெனின் அதைவிட்டு வெளியேற ஏன் விரும்பவில்லை?
பதில்: வெளியேறினால் ஜனநாயகம் வந்துவிடுமா? உள்ளிருந்து உரிமை அதிகாரத்துடன் கலந்துரையாடி போராடி அதனை நிலைநாட்டவேண்டும். அதனூடாக மக்களுக்கான சேவைசெய்யவேண்டும்.

கேள்வி: சரி. த.தே.கூட்டமைப்பை ஏன் இன்னும் பதியாமல் மற்றுமொரு கட்சியின் பெயரில் இயங்குகிறீர்கள்? அக்கட்சியில் தேர்தல் கேட்கிறீர்கள்? பதியப்படாமையில் தங்களும் உடன்பாடா?
பதில்: ஒருபோதும் உடன்பாடில்லை. கட்சி கட்டாயமாக பதியப்படவேண்டும். அதற்கு முறையான நிருவாகம் கட்டமைப்பு உருவாக்கப்பட்டு முறைப்படி தேசியமட்டம் மாவட்ட மட்டம் தொகுதி மட்டம் பிரதேச மட்டம் கிராமிய மட்டம் என இயங்கவேண்டும். மக்கள் மத்தியில் அரசியல் விழிப்புணர்வு நம்பிக்கை ஏற்படுத்தப்படவேண்டும்.

கேள்வி: புதிய அரசாங்கம் 2/3 பெற்று 13வது மற்றும் 19வது திருத்தத்தை நீக்கினால் தாங்கள் என்ன முடிவு எடுப்பீர்கள்.?
பதில்: நீக்குவதென்பது அவசியமற்றதொன்று. பண்டா செல்வா ஒப்பந்தம் எப்போது கிழித்தெறியப்பட்டதோ அன்று தொடக்கம் பிரச்சினை. நாட்டில் இன்றுவரைக்குமான இனப்பிரச்சினைக்குகாரணமே அதுதான்.. அது நடைமுறைக்குவந்திருந்தால் பிரச்சினையே இல்லை அதேபோன்றதொரு நிலை உருவாக்க இந்நீக்கம் வழிகோலும்.எனவே அதற்கு இடமளிக்கமுடியாது.

வி.ரி.சகாதேவராஜா
காரைதீவு நிருபர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :