கிழக்கு மாகாணத்தில் கடமை புரியும் ஆசிரியர்கள் ஓய்வூதியம் பெறுவதில் ஏற்படும் தாமதங்களைப் போக்க நடவடிக்கை எடுக்குமாறு கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் ஐ.கே.ஜி.முத்துபண்டா கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர், மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
அண்மையில் நடைபெற்ற அமைச்சின் கீழான திணைக்களத் தலைவர்கள் கூட்டத்தில் வைத்து இந்தப் பணிப்புரை விடுக்கப்பட்டது.
ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் சிலர் உரிய காலத்தில் ஓய்வூதியம் வழங்கப் படாமையினால் சிரமங்களை எதிர் நோக்கி வருகின்றனர். அவர்களது சுயவிபரக் கோவையிலுள்ள குறைபாடுகளே இதற்கு காரணம் என்பதை இதன்போது செயலாளர் சுட்டிக் காட்டினார்.
எனவே, அடுத்த வரும் 5 வருடங்களுக்குள் ஓய்வு பெறவுள்ள சகல ஆசிரியர்களினதும் சுயவிபரக்கோவைகளை ஒழுங்கு படுத்துமாறு வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.