ஜனாதிபதியாக கோத்தாபய ராஜபக்ச பதவியேற்று 3 மாதம் கடந்த நிலையில் நாட்டு மக்களின் நிலை என்ன? மக்கள் அசாதாரண நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதுடன் இந்த அரசாங்கத்தை உருவாக்கிய மக்களுக்கே இந்த அரசாங்கம் தாக்குதல் நடத்துகிறது என JVPயின் பாரளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு தாமரைக்கேணியில் அமைந்துள்ள தேசிய மக்கள் சக்தியின் காரியாலயத்தில் மாவட்ட இணைப்பாளர் நடேசன் சுந்தரேசன் ஏற்பாட்டில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய பாரளுமன்ற உறுப்பினர்:-
தற்போதைய அரசாங்கத்தின் ஜனாதிபதியாக கோத்தாபய ராஜபக்ச பதவியேற்று 3 மாதம் கடந்துவிட்ட நிலையில் நாட்டு மக்கள் பாரிய பிரச்சினைக்குள் தள்ளப்பட்டுள்ளனர்.
அதேவேளை, அரசாங்கமும் பாரிய பிரச்சினைக்குள் தள்ளப்பட்டுள்ளது உண்மையில் இந்த அரசாங்கத்தை உருவாக்கிய மக்களுக்கே இந்த அரசாங்கம் தாக்குதல் நடாத்துகின்றது . இந்த அரசாங்கத்திற்கு மக்கள் வாக்களிக்க காரணம் நாட்டு மக்களுக்கு வாழ்வதற்கு , பாதுகாப்பான ஒரு நாடு தேவை என்பதனால் தான்.
எனினும், UNPயின் ஆட்சியானது துஸ்பிரயோகங்கள் நிறைந்த ஆட்சியாகவும், திருடர்களை கொண்ட அரசாங்கமாகவும் இருப்பதால் ஆட்சியினை எங்களுக்கு தாருங்கள் இவற்றை இல்லாது ஒழிப்போம் என இந்த அரசாங்கம் உத்தரவாதம் அளித்தது.
விசேடமாக மத்திய வங்கி பிணை முறி ஊழலுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்குவதாக தெரிவித்து ஆட்சிக்கு வந்தது ஆனால் தற்போது அரசியல்வாதிகள் கதைக்க முடியாத முக்கிய விடயமாக மத்திய வங்கி பிணை முறி ஊழல் இருக்கின்றது .
அரசாங்கம் திருடர்களை பிடிக்கப்போவதாக கூறிய நிலையில் தற்போது திருடர்கள் அரசாங்கத்தை பிடித்துக் கொண்டுள்ளார்கள், பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் வந்து சரணடைகிறார்கள் , சரணடைந்தவர்கள் ஓரிரு நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்படுகிறார்கள் அதன்பின் வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டு மீண்டும் வீட்டுக்கு செல்கின்றார்கள் .
இவைதான் தற்போது நடக்கிறது .