சவூதி அரேபியா - ஜித்தா நகரிலிருந்து இந்தோனேசியா நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த விமானம் ஒன்று, கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளது.
குறித்த விமானத்திலிருந்து, இந்தோனேசியாவைச் சேர்ந்த இருவரின் சடலங்கள் விமான நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக, விமான நிலையத் தகவல்கள் தெரிவித்துள்ளன. குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, சவூதி அரேபியாவின் ஜித்தாவிலிருந்து 287 பயணிகளுடன் இந்தோனேசியாவின் ஜுவாண்டா நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த விமானமொன்று, கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறங்கியுள்ளது.
"லயன் ஏர்" நிறுவனத்திற்குச் சொந்தமான (JT-085 A330) குறித்த விமானம், இலங்கையின் வான் பரப்பில் பறந்து கொண்டிருந்த போது, விமானத்தில் பயணித்த இரண்டு பயணிகள் மயக்கமடைந்துள்ளனர். இதனையடுத்து, விமானி விமானத்தைத் தரையிறக்க கட்டுநாயக்க விமான நிலையத்தில் அனுமதி கோரியுள்ளார்.
அனுமதி கிடைத்ததையடுத்து, இவ்விமானம் (13) அதிகாலை 2.45 மணிக்கு, கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியது. இதன் போது, மயக்கமடைந்த பயணிகளை பரிசோதனை செய்த விமான நிலைய மருத்துவர்கள், இரு பயணிகளும் இறந்துவிட்டதாக அறிவித்தனர்.
குறித்த சம்பவத்தில் இந்தோனேசியவைச் சேர்ந்த 77 வயதுடைய பெண் ஒருவரும், 64 வயதுடைய ஆண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர்களின் சடலங்கள் நேற்றுக் காலை 7.40 மணியளவில் விமானத்திலிருந்து அகற்றப்பட்டு, நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, குறித்த விமானத்தின் உட்புறம் சுத்தம் செய்யப்பட்டு, எரிபொருள் நிறப்பப்பட்டு, காலை 8.13 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இந்தோனேசியாவுக்குப் பணயத்தைத் தொடர்ந்துள்ளது.
உரிய மருத்துவ மற்றும் ஏனைய விசாரணைகளின் பின்னர், சடலங்கள் இலங்கையிலுள்ள இந்தோனேசியத் தூதரகத்தில் ஒப்படைக்கப்படவுள்ளன.
