கடந்த 2019 ஆம் ஆண்டில் அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நோக்கிப் பயணித்த இலங்கையைச் சேர்ந்த சட்டவிரோத குடியேற்ற வாசிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், இலங்கை கடற்படை, விமானப்படை மற்றும் அவுஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்புப் படையுடன் இணைந்து, கண்காணிப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தியுள்ளது.
2016, 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் இலங்கையைச் சேர்ந்த 64 சட்ட விரோதக் குடியேற்றக்காரர்கள் நாட்டை விட்டு வெளியேற முயன்றதாக, இலங்கைக் கடற்படை தெரிவித்துள்ளது.
ஆனால், கடந்த ஆண்டில் சுமார் 175 சட்ட விரோதக் குடியேற்றக் காரர்கள் நாட்டை விட்டு வெளியேற முற்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் அதிகமானோர் சிலாபம், மட்டக்களப்பு தேவேந்திரமுனை மற்றும் திருகோணமலை ஆகிய பிரதேசங்களில் இருந்து வெளியேறியவர்கள் என, கடற்படை ஊடகப் பேச்சாளர் லெப்டினன்ட் கொமாண்டர் இசுரு சூரியபண்டார தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு அமைச்சின் ஊடக மையத்தில் (02) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து கருத்து வெளியிடுகையில், நாட்டை விட்டு சட்ட விரோதமாக வெளியேறத் தயாராகிக் கொண்டிருந்த நிலையிலும், எமது கடல் பிரதேச எல்லைகளுக்குள் வைத்தும் இவர்கள் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கடற்படையின் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைக்கப் பெற்ற தகவல்களின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருகோணமலை கடல் பிரதேசத்தில் அண்மையில் 4 பேர் தப்பிக்க முயற்சித்த சம்பவத்தை மேற்கோள் காட்டிய கடற்படைப் பேச்சாளர், ஆட்கடத்தல் மற்றும் மக்கள் கடலில் தமது உயிரைப் பணயம் வைப்பதைத் தடுக்கும் வகையில், இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அரசாங்கம் ஒரு வலுவான உறவைப் பகிர்ந்து கொண்டு பணியாற்றி வருவதாக, இலங்கை விஜயத்தின் போது அவுஸ்ரேலிய எல்லைப் பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் கிரெய்க் புரினி தெரிவித்திருந்ததை இங்கு சுட்டிக் காட்டியுள்ளார்.
நீங்கள் உயிரைப் பணையம் வைத்து மேற்கொள்ளும் இப்பயணத்தின் மூலம், உங்களுக்கு எவ்வித நன்மைகளும் கிட்டப்போவதில்லை. அவுஸ்திரேலியா மிகக் கடுமையான எல்லைப் பாதுகாப்புக் கொள்கைகளைக் கடைப்பிடிப்பதால், படகில் சட்டவிரோதமாகப் பயணிக்கும் எவரும் அவுஸ்திரேலியாவில் வாழவோ அல்லது வேலை செய்யவோ அனுமதிக்கப்படமாட்டார்கள் என மேஜர் ஜெனரல் புரினி மேலும் தெரிவித்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இங்கு கருத்து வெளியிட்ட கடற்படைப் பேச்சாளர், இதுபோன்ற சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளைத் தடுக்க மீனவர் சமூகம் தகவல்களை வழங்கி, தமது முழுமையான ஒத்துழைப்பை நல்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இவ்வாறு சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் தொடர்பிலான தகவல்களை வழங்கும் நபர்கள் குறித்த இரகசியத் தன்மைகளை இலங்கைக் கடற்படை பேணும் என்றும் அவர் மேலும் உறுதியளித்துள்ளார்.