ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதியில் சமூக வளைத்தளங்களை முறைகேடாகப் பயன்படுத்துவது தொடர்பில் கண்காணிப்பதற்கு தேவையான பொறிமுறையினை அமுல்படுத்துமாறு சிலோன் மீடியா போரம் கோரிக்கை ஒன்றினை இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கத்திற்கு விடுத்துள்ளது.
அக்கோரிக்கையில் மேலும் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது,
தேர்தல் காலப்பகுதியில் சமூக வளைத்தளங்களில் உண்மைக்கு புறம்பான தகவல்களையும், இனவாதக் கருத்துக்களையும் தனி நபருக்கு சேறுபூசும் விதமாக பல்வேறுபட்ட பதிவுகளை பதிவிடப்படுகின்றன.
இதனால் நாட்டின் நல்லிணக்கம், இன ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிக்கும் மற்றும் தனிமனித சுயகௌரவத்திற்கு களங்கத்தை ஏற்படுத்தும் தளமாக இன்று சமூக வளைத்தளங்கள் மாற்றப்பட்டுள்ளது.
மேலும் உண்மைக்கு புறம்பான தகவல்களைக் கொண்டு சமூக வளைத்தளங்களில் செய்திகள் புனையப்படுவதனால் செய்திகளின் உண்மைத் தன்மையை மக்கள் விளங்கிக் கொள்வதில் அசௌகரியங்களையும் எதிர்நோக்குகின்றனர் எனவும் சிலோன் மீடியா போரம் சுட்டிக்காட்டி கோரிக்கை விடுத்திருந்தது.
இக்கோரிக்கையினை ஏற்றுக்கொண்ட இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம், ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதியில் சமூக வளைத்தளங்களை முறைகேடாகப் பயன்படுத்துவது தொடர்பில் கண்காணிப்பதற்கு தேவையான தகவல்கள் மற்றும் முறைப்பாடுகளை பெற்றுக்கொள்வதற்கு மின்னஞ்சல் முகவரியொன்றினை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த மின்னஞ்சல் முகவரி per.itssl@gmail.com என்பதாகும்.
சமூக வளைத்தளங்களைப் பயன்படுத்துவோர் ஜனாதிபதி வேட்பாளர்கள் மற்றும் பல்வேறு அரசியல் குழுக்கள் ஆகியன ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதியில் எதிர்கொள்ளக்கூடிய முறைகேடான சமூக வளைத்தளப் பயன்பாடு குறித்த தகவல்களை மின்னஞ்சல் மூலம் தமது சங்கத்திற்கு தெரிவிக்க முடியுமென்று சங்கத்தின் தலைவர் ரஜீவ் ஜசிறு குருவிட்டகே மெத்தியூ தெரிவித்துள்ளார்.
முறைப்பாடுகளை சமர்ப்பிக்கும்போது முறைப்பாட்டிற்கான screenshots மற்றும் அதற்கான link ஆகியவற்றை முறைப்பாட்டுடன் இணைத்து அனுப்புவதன் மூலம் கண்காணிப்பு நடவடிக்கைகளை வெற்றிகரமாக மேற்கொள்ள முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.