என் நேரம் முடிந்தது
*************************
மருதமுனை
நிஸா
காலை விடிந்ததும்
என் நேரம் முடிந்தது!
நான் போகிறேன் பெfறோ!..
என் தந்தையை
என் சகோக்களை
என் உறவுளை விட்டும்
மொத்தமாய் இவ்வுலகை விட்டு
விடைபெறுகிறேன்!..
கவலையைத் தந்துவிட்டு
தலைமறைவாகிறேன்
உன்னைவிட்டு தூரமாகிறேன் என்று
கலங்காதே என் கண்மணியே!..
உன் அருகில்தான் இருக்கிறேன்!..
இறைவன் எனக்குத் தந்த
இவ்வுலக வாழ்வு முடிந்தது
இன்றோடு ஓய்வாகிறேன்
நன்றாய் ஏற்றுக்கொள்
எல்லோரும் ஓர்நாள் ஓய்வு பெற்றுத்தானே ஆக வேண்டும்!..
நோய்ப் படுக்கையில் இருந்து....
விபத்தொன்றில் சிக்கி...
ஆஸ்பத்திரியில் திரிந்து...
நான் மரணித்திருந்தால் எல்லோர் மனமும்
என் மரணத்தை ஏற்றுக் கொள்ளும் என்று தப்புக் கணக்கு போடவிடாதே!..
என் திடீர் மரணமே எல்லோரையும்
அவ்வாறு சிந்திக்க வைக்கிறது!.
யாரையும் கஷ்டப்படுத்தாமல்..
என் உடல் நோகாமல்...
வலியை அனுபவித்து... அவஸ்தைப்படாமல்... என் றூஹ்
பறிக்கப்பட்டதே ஓரிரு மணி நேரங்களில்...
இறைவன் வகுத்த கணக்கு
இதுதான் எனக்கு!..
எனக்கென்ன நேர்ந்தது என்று
உனக்கு மட்டும் தானே தெரியும்
பிறர் நாவினால் வரும்
வதந்திகள் உன் காதுகளையும்
கல்புனிலும் பாரத்தை ஏற்றாது
திடமாய் இரு என் உயிரே!...
ஆறுதல் எனும் வார்த்தையை
யாரிடமும் எதிர்பாராதே!..
பொய்யாக சிலர் நடிப்பர்...
பொய்யாக சிலர் துடிப்பர்...
ஒப்பாரி ஓலமிட்டு காட்டுவர்...
அதில் உண்மையும் ஓரிரு உள்ளங்களில் மறைந்திருக்கும்!..
இவ்வுலகம் போலி என்பதை மட்டும்
நீ ஏற்றுக்கொண்டால் போதும்!..
இனி யாருக்காக வாழ்வது...
எதற்காக வாழ்வது... என்று
உன்னை இழந்திடாதே என்னவளே!..
எல்லோருக்கும் குறிப்பிட்ட நேரம்
வரும்வரை மறுமைக்காய் ஏதாவது
தேடு அதுதான் எமக்கு நிரந்தரம்!..
நம் மகன் அம்சில் ஐ நினைவில்கொள்!..
இறைவளியில் அவனை
நெறிதவறா நன்மகனாய்
வளர்த்தெடு என் உயிர் மனைவியே!..
உயிருக்கு உயிராய் எனை
காதலித்தவள் நீ ஒரு மனைவியாக!..
உனை விட்டு பிரிய ஆசையில்லைதான் எனக்கு!.. ஆனாலும் என்ன செய்ய
விதி இதுதான் என
பொருந்திக்கொள் என்னவளே!..
பெற்றவரையும்
மற்றவரையும் விட
பல மடங்கு பாசமானவன் படைத்தவன்
அவன் எனை அழைத்திருக்கையில்
எவ்வாறு நான் மறுப்பேன் சொல்?..
ஏற்றுத்தானே ஆகவேண்டும்
ஏகனின் ஏவலதனை!..
கண்ணீரை இன்னும்
பொழிந்து கொண்டே இருக்காதே
கவலை எனும் வளையைப்
பிடித்துக்கொண்டு தொங்காதே!..
வீணுக்கும் வேடிக்கைக்கும்
வாழும் இவ்வுலக வாழ்க்கை
வெறும் பொய் அதனை
புரிந்துகொள்!..
தர்மமும் தியாகமும்
உன் மூச்சாக இருக்குமளவிற்கு வாழ்ந்துவிடு!.
தனிமையை உனக்கு
பரிசாய் தந்தேன் என்று
தவறாய் எண்ணிவிடாதே
உனக்கு தெரியாத
நலவுகள் என் பிரிவால்
ஆயிரம் இருக்கும்!..
நம் மகனிடம் சொல்
உன் வாப்பா உன்னைச்சுற்றித்தான் இருக்கிறார் என்று!..
உடல் மட்டும் தான் பிரிந்ததென்று
என் தந்தையிடம் சொல்!..
நம்மோடுதான் இருக்கிறார் என்று என் சகோக்களிடம்
சொல்!..
உங்களோடுதான்
உலாவுகிறார் என்று
என் நட்புகளுக்குச் சொல்!..
சந்திப்போம் பொறுத்திரு
இதைவிட அழகானதொரு
உலகில்....
சுவன வாயிலில் காத்திருப்பேன்
உனக்காக!..