ஏஎம் றிகாஸ்-
மட்டக்களப்பு- உறுகாமம் சுபைர் ஹாஜியார் பாடசாலை மற்றும் அப்பொதுமக்களுக்குமான குடிநீர் விநியோகம் இன்று 08.07.2019 சம்பிரதாயபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.
மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப்பணிப்பாளர் டாக்டர் எஸ்எம்எம்எஸ். உமர்மௌலானா இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக்கலந்துகொண்டார்.
உறுகாமம் பிரதேசத்தில் அண்மைக்காலமாக நிலவிவரும் கடும்வரட்சி காரணமாக பாடசாலை மாணவர்கள் மற்றும் பிரதேச மக்களும் குடிநீரைப் பெற்றுக்கொள்வதில் எதிர்நோக்கியுள்ள சிரமங்களைக்கருத்திற்கொண்டு நெதர்லாந்து நாட்டு தனவந்தர்களின் நிதியுதவியுடன் இக்குடிநீர் விநியோகத்திட்டம் அமைக்கப்பட்டது.
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் சமாதானம் , சமூக ஒருங்கிணைப்பு மற்றும் இப்பாடசாலை மேம்பாட்டு உத்தியோகத்தருமான எம்ஜிஏ நாஸர் அவர்களது முயற்சியின் பயனாக இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இப்பாடசாலை ஆரம்பிக்கப்பட்டு சுமார் 75 வருடங்களைக் கடந்துவிட்டபோதிலும் மாணவர்கள் குடிநீரைப் பெற்றுக்கொள்வதற்கு முறையான திட்டம் அமுல்செய்யப்படாததனால் காலத்திற்குக்காலம் ஏற்படும் வரட்சியின்போது மாணவர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் சமாதானம் ,சமூக ஒருங்கிணைப்பு விடயம் மற்றும் இப்பாடசாலை மேம்பாட்டு உத்தியோகத்தருமான எம்ஜிஏ நாஸர் உள்ளிட்ட கல்வியதிகாரிகள், பிரதேச சமய, சமூக முக்கியஸ்தர்கள் பொதுமக்கள் என பலரும் பிரசன்னமாயிருந்தனர்.