மஹிந்த ராஜபக்ச புதிய பிரதமராக பதவி ஏற்று புதிய அரசு உருவாக்கப்பட்ட பின்னர் பாராளுமன்றம் கடந்த 14 ஆம் திகதி முதல் குழப்பத்துடனே நடைபெற்று வருகிறது.
கடந்த அமர்வுகளில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் காரணமாக இன்றும் பார்வையாளர் கலரி, விசேட அதிதிகளுக்கான கலரி ஆகியன மூடப்பட்டிருந்தது.
கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற சபை அமர்வை மஹிந்த அணி புறக்கணிப்பு செய்திருந்தது. அதேபோல இன்றைய அமர்வையும் மஹிந்த தரப்பு புறக்கணிப்பு செய்து வெளியில் ஊடக சந்திப்பில் ஈடுபட்டுள்ளனர்.
அதே வேளை , சுதந்திர கூட்டமைப்பு சார்பாக சபாநாயகர் கரு ஜெயசூரியாவுக்கு கடிதம் ஒன்று சமர்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த கடிதத்தில் , கடந்த நவம்பர் 14 ஆம் திகதி முதல் பாராளுமன்ற அமர்வுகள் அரசியலமைப்புக்கு விரோதமாக பாராளுமன்ற நிலையியல் சட்டங்களை மீறி நடைபெற்றது. ஆகையால் எம்மால் அதை ஏற்றுகொள்ள முடியாது. ஆகவே அந்த நாட்களில் இடம்பெற்ற அமர்வுகள் தொடர்பில் பாராளுமன்ற பதிவேட்டு அறிக்கைகளை வெளியிட வேண்டாம் என கூறப்பட்டுள்ளது.
இது தவிர இன்றைய பாராளுமன்றம் வெறுமனே ஐக்கிய தேசிய முன்னணியின் கட்சி உறுப்பினர்களுடன் மாத்திரம் நடைபெற்று வருகின்றது.