அஸ்லம் எஸ்.மௌலானா-
கல்முனை மாநகர அபிவிருத்திக்கும் நற்பிட்டிமுனை கிராமத்தின் முன்னேற்றத்திற்கும் முதல்வருடன் ஒத்துழைத்து செயற்படுவதுடன் இவ்விடயங்களுக்காக தன்னால் முடிந்த பங்களிப்பை வழங்குவேன் என கல்முனை மாநகர சபையின் புதிய உறுப்பினர் ஏ.எல்.றபீக் தெரிவித்தார்.
கல்முனை மாநகர சபையின் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி சார்பான புதிய உறுப்பினர் ஏ.எல்.றபீக் நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து பதவியேற்றுக் கொண்டார். இந்நிகழ்வில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் கல்முனை மாநகர ஆணையாளர் எம்.சி.அன்சார், மாநகர சபையின் பிரதி முதல்வர் காத்தமுத்து கணேஷ், மாநகர சபை உறுப்பினர் எம்.எஸ்.எம்.நவாஸ், சுகாதாரப் பிரிவு தலைமை உத்தியோகத்தர் ஏ.எம்.எம்.அஹ்சன் ஆகியோருடன் புதிய உறுப்பினரின் ஆதரவாளர்களும் பங்கேற்றிருந்தனர்.
அங்கு உறுப்பினர் றபீக் மேலும் தெரிவிக்கையில்;
"கல்முனை மாநகர சபையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பட்டியல் உறுப்பினராக பதவி வகித்து வந்த இசட்.ஏ.எச்.ரஹ்மான், மீண்டும் பொலிஸ் சேவையில் இணைந்து கொண்டதைத் தொடர்ந்து, அவர் உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்திருந்தார். அவ்வெற்றிடத்துக்கு எமது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவம் என் மீது நம்பிக்கை வைத்து, என்னை நியமித்துள்ளது. அந்த நம்பிக்கையை நான் என்றும் காப்பாற்றுவேன்.
இந்த மாநகர சபையில் கட்சிக்கும் எனது நற்பிட்டிமுனை கிராமத்திற்கும் முன்னுரிமையளித்து செயற்படுவேன். அதேவேளை முதல்வரின் அபிவிருத்தி திட்டங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவேன். அவர் எனது நீண்ட நாள் நண்பர் என்ற வகையில் எம்மிருவரிடையேயும் இருக்கின்ற நல்லுறவு காரணமாக தனிப்பட்ட முறையில் அவருடன் இணைந்து செயற்படுவதில் எனக்கு எந்த பிரச்சினையும் ஏற்படாது என நம்புகிறேன்.
அதேவேளை நற்பிட்டிமுனை கிராமத்தில் கல்முனை மாநகர சபையினால் முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்தி திட்டங்களை எண்ணூடாக முன்னெடுக்க வேண்டும் என்ற வேண்டுகோளை முதல்வரிடம் விடுக்கின்றேன். நான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்க கட்சி உறுப்பினர் என்ற வகையில் என்னால் முடிந்த அபிவிருத்தி திட்டங்களை இம்மாநகர சபைக்கு கொண்டு வருவேன்" என்றும் குறிப்பிட்டார்.