பிரதி அமைச்சர் ஹரீஸின் முயற்சியினால் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகத்தின் நிதி ஒதக்கீட்டில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வு இன்று (17) புதன்கிழமை கல்முனை பிரதேச செயலாளர் எம்.எச். முகம்மட் கனி தலைமையில் பிரதேச செயலக கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு தெரிவு செய்யப்பட்ட 20 பயனாளிகளுக்கு நெசவுத் தொழிலை மேற்கொள்வதற்கான உபகரணங்களை வழங்கிவைத்தார்.
இந்நிகழ்வில் கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான எம்.எஸ். உமர் அலி, எம்.எஸ்.எம். நவாஸ், கல்முனை பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் கே. இராஜதுரை, பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர் நௌபர் ஏ. பாவா, பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
மேலும் இதன்போது பிரதி அமைச்சர் ஹரீஸின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் விளையாட்டுக் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.