உதுமாலெப்பை மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப்போடப் பார்க்கிறார்: முன்னாள் அமைச்சர் சுபைர்




எஸ்.அஷ்ரப்கான்-
தேசிய காங்கிரஸ் கட்சியிலிருந்து உதுமாலெப்பை பிரிந்து செல்வதற்கும், அவரது எதிர்கால அரசியல் நடவடிக்கைகளை பிரிதொரு கட்சியில் இணைந்து முன்னெடுப்பதற்கும், அவருக்கு உரிமையுள்ளது. அவரது எதிர்கால அரசியல் நகர்வுகளுக்கு அவரினால் தற்போது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் சிறுபிள்ளைத்தனமானது எனவும், அதற்காகவே அவர் தம்மீது வீன் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகிறார் எனவும் கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.சுபைர் தெரிவித்தார்.
முன்னாள் அமைச்சர் சுபைர் தொடர்பாக பொய்யான தகவல்களை வெளியிட வேண்டிய எந்தத் தேவையும் இல்லை எனும் தலைப்பில் உதுமாலெப்பையினால் வெளியிடப்பட்ட செய்தி தொடர்பில் விளக்கமளிக்கும் போதே அவர் மேற்கன்டவாறு தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் நேற்று (2) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்,
முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சர் உதுமாலெப்பை தேசிய காங்கிரஸ் கட்சியில் தான் வகித்த பதவிகளை அண்மையில் துறந்துவிட்டு, தனது தொலைபேசியினையும், நிறுத்தி வைத்திருந்தார். முஸ்லிம் கூட்டமைப்பு தொடர்பில் தலைமைக்கு அழுத்தம் கொடுக்கவே, தனது பதவிகளை துறந்தேன் எனவும் அப்போது அவர் அறிக்கை விட்டிருந்தார்.

பதவிகளை துறந்து தொலைபேசியினையும் நிறுத்தி வைத்திருந்த உதுமாலெப்பையை அவரது கட்சி ஆதரவாளர்கள் வலைவிரித்து தேடியபோது, அவரது நண்பன் என்ற வகையில், உதுமாலெப்பையின் இராஜினமா தொடர்பிலும் அவரது அரசியல் நகர்வுகள் குறித்தும் தகவல்களை பெற்றுக்கொள்ளும் பொருட்டு நானும் அவரை தேடினேன், அப்போது உதுமாலெப்பை கொழும்பில் இருப்பதாகவும் அறிந்துகொண்டேன்.

இது இவ்வாறிருக்க தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட உதுமாலெப்பை, தான் 30 மில்லியன் பணம் பெற்றதாக முன்னாள் அமைச்சர் சுபைர் தலைவர் அதாஉல்லாவிடம் கூறியதாகவும், தலைவர் தன்னிடம் தெரிவித்ததாகவும் கூறினார். உதுமாலெப்பையின் கூற்றை மறுத்த நான், உதுமாலெப்பை நேசிக்கின்ற தலைவர் அதாஉல்லாவால் சுபையிர் அப்படி பேசியதாக எங்காவது கூறச்சொல்லட்டும், நான் அழிவுச்சத்தியம் செய்வதற்கும் தயாராக இருக்கிறேன் என பகிரங்க அழைப்பு விடுத்தேன்.

இதற்கு முறையாக பதில் வழங்க முடியாத உதுமாலெப்பை இப்போது தேசிய காங்கிரசின் அட்டாளைச்சேனை முக்கியஸ்தர்கள் இருவரிடம்தான் அதாஉல்லா அவ்வாறு கூறினார் என்கிறார். இப்படி உதுமாலெப்பை சிறுபிள்ளைத்தனமாக அரசியல் செய்வார் என நான் ஒருபோதும் நினைக்கவில்லை. இப்போதும் மிகத்தெளிவாக கூறுகின்றேன் உதுமாலெப்பை கூறுவது போன்று நான் யாரிடமும் கூறவில்லை. உதுமாலெப்பைக்கு நெருக்கமான அவர் மிகவும் நேசிக்கின்ற தலைவர் அதாஉல்லாவினால் எங்காவது ஒரு சந்தர்ப்பத்தில் அவ்வாறு கூறத்தான் முடியுமா? நான் கூறாத ஒரு விடயத்தினை எப்படி கூறுவது. அதாஉல்லாவை மக்கள் மத்தியில் பிழையாக சித்தரிப்பதற்கு உதுமாலெப்பை போட்ட நாடகமே இது என நினைக்கின்றேன்.
உதுமாலெப்பை தனது தொலைபேசியினை சில தினங்கள் நிறுத்திவிட்டு, இருந்த போது அவரை தொடர்புகொள்ள முயற்சித்தும் பலனளிக்கவில்லை. அதன்பின்னர் அவரை தொடர்புகொள்ளும் பொருட்டு, அவரது பேரன் முறையான ஒருவருக்கு அழைப்பினை ஏற்படுத்தினேன். அவரது தொலைபேசியும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதன்பின்னர் சில நிமிடங்களில் குறித்த நபர் எனக்கு அழைப்பினை ஏற்படுத்தினார். நான் முன்னாள் அமைச்சர் சுபைர் என என்னை அறிமுகம் செய்து உதுமாலெப்பை தொடர்பில் வினவினேன். அப்போது அவரின் பதிலில் அதிர்ச்சியான சம்பவங்களும் எனக்கு கிடைத்தது.
இது இவ்வாறிருக்க, தொலைக்காட்சி நிகழ்ச்சின் போது உதுமாலெப்பை குறிப்பிடுகையில், அவருடைய காரியாலயத்தில் வேலை செய்கின்ற பொடியனிடம் நான் தொடர்பு கொண்டு அவர் தொடர்பில் வினவியதாக தெரிவித்தார். அதன் பின்னர் இப்போது ஊடக அறிக்கை ஒன்றில் அவரது குடும்ப உறவினருடன் தொடர்பு கொண்டு வினவியதாக குறிப்பிடுகிறார். உதுமாலெப்பை இப்போது சிறு பிள்ளைக்கு கதை சொல்வது போன்று பேசுகிறார். அவரது கூற்று முன்னுக்கு பின் முரணாக காணப்படுகிறது. உதுமாலெப்பையின் உறவினரே எனக்கு அழைப்பெடுத்து தகவல் வழங்கினார் என்பதனை அவர் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். அல்லது சிறு பிள்ளை கதை கேட்டு அறிக்கை விடுவதனை கைவிட வேண்டும். இந்த விடயத்திலும் உதுமாலெப்பை என்மீது திட்டமிட்டு வீண்பழி சுமத்துகிறார்.

உதுமாலெப்பை புதுக்கடையில் சிரேஸ்ட ஊடகவியலாளர்களை சந்தித்த போது தனது இராஜினாமா தொடர்பிலும், தனது எதிர்கால அரசியல் தொடர்பிலும் சற்று சூசகமாக பேசியிருக்கிறார். குறித்த ஊடகவியலாளர்கள் அதனை செய்தியாகவும் வெளியிட்டிருந்தனர். உதுமாலெப்பை தனது நிலைப்பாட்டினை அவர்களிடத்தில் கூறவில்லை என்றால் எவ்வாறு அவர்கள் செய்தியினை வெளியிடுவது. இது தொடர்பில் அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சின்போது ஊடகவியலாளர்களிடத்தில் நான் எதுவும் பேசவில்லை. இந்த நாட்டில் டீ குடிப்பதற்கு சுதந்திரமில்லை என்றும், உண்மைக்கு புறம்பான செய்திகளை ஊடகவியலாளர்கள் வெளியிட்டுள்ளனர் என்றும் உதுமாலெப்பை ஊடகவியலாளர்களை தறக்குறைவாகப் பேசி திட்டித்தீர்த்தார்.
குறித்த நிகழ்ச்சியின் போது உதுமாலெப்பையின் முன்னிலையில் அந்த ஊடகவியலாளர் ஒருவரின் குரல்வழி ஒலிப்பதிவு காண்பிக்கப்பட்டது. இதன்போது உதுமாலெப்பை தெரிவித்தவற்றையே நாங்கள் பிரசுரித்தோம் என்றும் அது தொடர்பில் கஃபதுல்லா சென்று சத்தியம் செய்யவும் தயார் என்றும் அந்த ஊடகவியலாளர் குறிப்பிட்டார். இந்த நேரத்தில் உதுமாலெப்பை மௌனியாகிவிட்டார். உதுமாலெப்பை பொய் குற்றச்சாட்டுக்களை சுமத்துகிறார் என்பதும் அன்றைய நிகழ்ச்சியின் போது தெட்டத்தெளிவாகியது.

உதுமாலெப்பை சுகவீனமுற்றிருந்த போது அவரை நான் பார்க்கவில்லை என்றும், பாலமுனை பிரகடனத்தின் போது அவர் கூறாததனை நான் கூறியதாகவும் என்மீது குற்றம் சுமத்தியுள்ளார். உதுமாலெப்பை சுகவீனமடைந்து வைத்தியசாலையில் இருந்த போது நான் மட்டக்களப்பில் இருந்ததனால் அவரைப் பார்க்கக்கிடைக்கவில்லை. ஆனால் தொலைபேசியில் தொடர்புகொண்டு அவரிடம் சுகம் விசாரித்ததனை அவர் இப்போது மறந்து பேசுகிறார். உதுமாலெப்பை ஒரு சந்தர்ப்பவாதியாக மாறுவார் என நான் ஒருபோதும் நினைக்கவில்லை. உதுமாலெப்பையினை அவரது கொழும்பு வீட்டில் சந்தித்து அவரது சுகம் விசாரிக்க முயற்சித்தும் அது பலனளிக்கவில்லை. அவரது கொழும்பு வீட்டுக்கு சென்று அவரை பார்ப்பதற்கும் அவர் விரும்பவில்லை.
அப்படி இருக்க உதுமாலெப்பையை எங்கு சென்று பார்ப்பது. கொழும்பிலே நிகழ்வொன்றில் கலந்துகொள்ளும் பொருட்டு, நானும் உதுமாலெப்பையும் எனது வாகனத்தில் இரண்டு தடவைகள் சென்றிருக்கின்றோம். அவரை நான் அவரது கொழும்பு வீட்டுக்கு கொண்டு விடுவதற்கு முயற்சித்தும் அவர் அதனை விரும்பாது வீதியிலே இறங்கி நடந்து சென்றார். உதுமாலெப்பையின் இவ்வாறான செயற்பாடு குறித்து நான் அதிர்ச்சியடைந்தேன். இப்படியான உதுமாலெப்பை இன்று நேர்மை பற்றி பேச விளைகிறார்.
தேசிய காங்கிரசின் பாலமுனை பிரகடனத்தின் போது உதுமாலெப்பை கூறாத விடயத்தினை நான் கூறியதாக என்மீது குற்றச்சாட்டொன்றினை அவர் முன்வைத்துள்ளார். பாலமுனை பிரகடனத்தில் கலந்துகொள்ளுமாறு அந்த கட்சியினால் பொதுவான அழைப்பொன்று எனக்கு கிடைத்தது. அதன் நிமிர்த்தம் உதுமாலெப்பையை தொடர்புகொண்டு குறித்த நிகழ்வு தொடர்பில் பேசினேன். அவர் சுகயீனமுற்று வைத்தியசாலையில் இருப்பதாகவும், குறித்த நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு பதிலுரைத்தார்.
அதற்கிணங்க, பாலமுனை பிரகடனத்தில் கலந்துகொண்டு உரையாற்றினேன். அப்போது உதுமாலெப்பை வைத்தியசாலையில் இருப்பதாகவும், அவரினால் இந்நிகழ்வில் கலந்துகொள்ள முடியாது என கூறினேன். அத்துடன், உதுமாலெப்பை ஒரு நண்பர் என்ற ரீதியில் மேலும் அவரைப்பற்றி சில வார்த்தைகள் பேசியிருந்தேன். இது வழக்கமான நடைமுறையிலுள்ள ஒரு பிரச்சினையாகும். இதில் என்ன தவறு இருக்கிறது. இதனை புரிந்துகொள்ளாமலும், பக்குவமில்லாமலும் உதுமாலெப்பை தற்போது கூறியிருப்பது அவர் ஒரு சந்தர்ப்பவாதி என்பதனை வெளிப்படுத்தியுள்ளது.

பாலமுனை பிரகடனத்தின் போது நான் உதுமாலெப்பையோ, அல்லது தேசிய காங்கிரசின் தலைவரையோ, அந்தக்கட்சியினையோ பிழையாக பேசவில்லை. அப்படி கூறியிருந்தால் ஆதாரங்களுடன் அவர் நிருபிக்கட்டும். உதுமாலெப்பை ஒரு நேர்மையான அரசியல்வாதி என்றிருந்தால் அவர் அதுதொடர்பில் என்னிடம் அக்காலப்பகுதியில் கேட்டிருக்க வேண்டும். அல்லது அறிக்கையொன்றினையாவது விட்டிருக்க வேண்டும்.

உதுமாலெப்பை தன்னிடம் கேட்டுக்கொண்டதற்கினங்க சுதந்திர கிழக்கு கூட்டத்தினை ஏறாவூரில் முதன்முதலில் ஏற்பாடு செய்தவன் நானே, அந்தக்கூட்டத்திலும் உதுமாலெப்பை பேசிவிட்டு சென்றார். அதன்பின்னர் நாங்கள் ஒன்றாக சென்று மூதூரில் நடந்த சுதந்திர கிழக்கு கூட்டத்திலும் பேசினோம் அப்போதும் ஒன்றும் பேசாது மௌனியாக இருந்த உதுமாலெப்பை தற்போது சந்தர்ப்பம் பார்த்து பேசுவது அவரது நயவஞ்சகதனத்தின் வெளிப்பாடாகும். இவ்வாறு உள்ளொன்றும் வெளியொன்றும் வைத்துக்கொண்டு என்னொடு நண்பனாகநடித்துக்கொண்டிருந்துள்ளார் என்பது இப்போது புலனாகிறது.
உதுமாலெப்பைக்கு ஞானம் பிறந்து ஒரு சில வருடங்களுக்கு முன்னர் பேசிய விடயங்கள் இப்போதுதான் ஞாபகத்திற்கு வருகிறது. ஒரு முஸ்லிமாக இருந்துகொண்டு ஒரு சில வருடங்களுக்கு முன்னர் பேசிய விடயத்தினை மனதில் வைத்துக்கொண்டு என்னோடு நீண்டகாலமாக நயவஞ்சகதனமாக பழகியுள்ளார். அவர் சந்தர்ப்பம் பார்த்து முனாபிக் தனமாக நடந்துள்ளார். இவ்வாறான அவரின் செயற்பாடுகள் குறித்து கவலையடைகின்றேன்.

தேசிய காங்கிரசின் தலைவர் அதாஉல்லா ஒரு மூத்த அரசியல்வாதி அவருக்கு யாரும் அரசியல் சொல்லிக்கொடுக்க வேண்டிய தேவை கிடையாது. உதுமாலெப்பை சொல்வது போன்று அவர் யாருடைய கதைகளை கேட்பதற்கு சிறு பிள்ளையும் கிடையாது. அதாஉல்லா சத்திய தலைவர் என்றும் அவர் ஒரு தீர்க்கதரிசி என்றும் தலைமையில் வைத்து போற்றிய உதுமாலெப்பை இன்று தனது தலைவரை இழிவுபடுத்தி பேசுவது வேடிக்கையாகவுள்ளது. அப்படியான ஒரு தலைவரை இன்று உதுமாலெப்பை பிழை கானுகின்றார்.
குறிப்பாக எனது பெயர் தேசிய காங்கிரசிக்குள் இயங்கும் சதிகார குழுவில் இடம்பெற்றுள்ளதாக உதுமாலெப்பை கூறுகிறார். எனது நற்பெயருக்கு சேறுபூசும் நடவடிக்கையாகவே நான் அதனை பார்க்கிறேன். உதுமாலெப்பை எந்தக்கட்சிக்கு சென்றாலும் எனக்குப் பிரச்சினை கிடையாது என்பதனை அவர் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். அவர் நான் அங்கம் வகிக்கும் கட்சியினை சார்ந்தவருமல்ல. எனது மாவட்டமும் அல்ல. அவரது பிரிவு இணைவு என்பன எனக்கு எந்தவொரு தாக்கத்தினையும் ஏற்படுத்தப் போவதுமில்லை.

உதுமாலெப்பை சிறுபிள்ளைத்தனமாக பேசி ஒரு சந்தர்ப்பவாதியாக செயற்படுவார் என நான் கனவிலும் எண்ணிப்பார்க்கவில்லை. அவரது எதிர்கால அரசியல் நகர்வுகளுக்கு அவர் தற்போது கூறும் நொண்டிக் குற்றச்சாட்டுக்கள் ஒரு பலமான காரணங்களாக அமையாது என்பதனை மக்கள் அறியும் காலம் வெகுதொலைவில் இல்லை எனவும் சுபைர் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -