ஸ்போர்ட்ஸ் பெஸ்ட் பவுண்டேஷன் அங்குரார்ப்பண நிகழ்வில் அமைச்சர் பைஸர் முஸ்தபா
ஐ. ஏ. காதிர் கான்-
சிலர் அரசியலுக்குள் அதிகாரங்களுக்காகவும், தனிப்பட்ட நலன்களை அடைந்து கொள்வதற்காகவும் நுழைகின்றார்கள். ஆனால், பிரதியமைச்சர் ஹரீஸ், மக்களோடு மக்களாக இருந்து, மக்களுக்காகவே சேவை செய்பவர். குறிப்பாக, இளைஞர்களின் எதிர்காலத்திற்காகச் செயற்படுகின்ற ஒரு செயல் வீரர் என, மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்தார்.
அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதியமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித்தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸின் எண்ணக்கருவில், கிராமிய மட்டத்தில் விளையாட்டுத்துறையை ஊக்குவிக்கும் நோக்கை அடிப்படையாகக் கொண்டு, ‘ஸ்போர்ட்ஸ் பெஸ்ட் பவுண்டேஷன்’ அமைப்பினை அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் நிகழ்வு, (13) வியாழக்கிழமை கொழும்பு கலதாரி ஹோட்டலில் நடைபெற்றது.
பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வுக்கு பிரதியமைச்சர் அலி சாஹிர் மௌலானா, பாராளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன், இலங்கைக்கான குவைத் நாட்டுத்தூதுவர் கலாப் பூ துஹைர், அவுஸ்திரேலியாவின் கஸ்சல்லோ குறூப் நிறுவனத்தின் பணிப்பாளர் கஸ்சல்லோ மார்சல்லோ, தென் கொரியாவின் என்.வீ.ஜி. குறூப் நிறுவனத்தின் பணிப்பாளர் லிம் டொங் பியோ மற்றும் வெளிநாட்டுத்தூதுவர்கள், உள்நாட்டு வெளிநாட்டுப் பிரமுகர்கள், விளையாட்டுத்துறை விற்பன்னர்கள், விளையாட்டுத்துறை ஆர்வலர்கள். தொழிலதிபர்கள், ஊடகவியலாளர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து அமைச்சர் அங்கு உரையாற்றுகையில், பிரதியமைச்சர் ஹரீஸ் ஒரு அரசியல்வாதி. அதற்கும் அப்பால் அவர் ஓரு சட்டத்தரணி. அனைத்துக்கும் மேலாக அவர் ஒரு மனித நேயமிக்கவர். அவருடன் இணைந்து செயற்படுவதில் நான் பெருமையடைகின்றேன். அவருக்கு எதிர்காலம் பற்றிய சிறந்த தூரநோக்குச் சிந்தனையுள்ளது. நாங்கள் சகோதரர்களாகச் சிந்தித்துச் செயற்பட வேண்டும்.
சிலர் தனது சமூகம் பற்றி சிந்திக்கின்றார்கள். சிலர் பிரதேச ரீதியாக சிந்திக்கிறார்கள். நாங்கள் தேசியம் என்ற வகையில் முன்னேறிச்செல்ல வேண்டும். நான் நினைக்கின்றேன். ஹரீஸினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள ‘ஸ்போர்ஸ்ட் பெஸ்ட் பவுண்டேஷன்’ அமைப்பு தெளிவான இலக்குகளினூடாக சரியான பொறிமுறைகளைக்கையாண்டு, ஒரே இலங்கை என்ற இலக்கை அடைய முடியும்.
கடந்த 30 வருட யுத்தத்தினால் கிழக்கு மாகாணம் பின்னடைந்திருந்தது. யுத்தத்தினால் மக்களின் உடமைகளும் வாழ்வாதாரங்களும் அழிக்கப்பட்டு, சகோதரத்துவம் சிதைந்திருந்தது. சகோதரத்துவத்தைக் கட்டியெழுப்புவதற்கும், மக்களை ஒன்றிணைப்பதற்குமான ஒரு ஊடகமாக விளையாட்டு அமைகிறது. மக்களை ஒன்றிணைப்பதில் பிரதியமைச்சர் ஹரீஸின் தலைமைத்துவத்தை நான் மெச்சுகின்றேன்.
இன்று கிழக்கு மாகாண அரசியல் பிளவுபட்டிருக்கிறது. இதனை ஒரு குடையின் கீழ் கொண்டு வருவதற்குப் பிரதியமைச்சர் ஹரீஸ் செயற்பட்டு வருகின்றார். அவர் சமூகத்தைப்பற்றியும், நாட்டைப்பற்றியும் சிந்தித்துச் செயற்படுகின்றவர். அவருடைய தூர நோக்குப் பாதையையும் அவர் முன்னோக்கிச் செல்கின்ற பாதையையும் நான் பாராட்டுகின்றேன்.
விளையாட்டுத்துறை அமைச்சர் என்ற வகையில், இந்த அமைப்பு சரியான நேரத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இதனையிட்டு பிரதியமைச்சர் ஹரீஸுக்கு நான் நன்றி கூறக்கடமைப்பட்டுள்ளேன்.
விளையாட்டு, மக்களை ஒன்றிணைக்கும் துறையாகும். நான் மிகவும் அதிர்ஷ்டத்துக்குரியவன். நான் விளையாட்டுத்துறை அமைச்சராக இருக்கையில், எமது தேசிய அணிகள் நல்ல முறையில் பிரகாசிக்கின்ற நேரத்தில், விசேடமாக கிரிக்கெட் அணியின் வெற்றியினால் மக்கள் எங்களைப் பாராட்டுவார்கள். ஆனால், நாங்கள் சந்தோஷமடைய முடியாது. அப்பாராட்டுக்குரியவர்கள் நாங்களல்ல.
வலைப்பந்தாட்டம், கரம், கிரிக்கட் போன்றவற்றில் வெற்றி பெற்றுள்ளோம். அதற்கான பேரும் புகழும் அமைச்சருக்கு வருகிறது. ஆனால், அந்தப் புகழுக்குரிய உரிமை எமக்கில்லை. ஏனென்றால், வீரர்களினதும் சம்மேளனங்களினதும் கடின உழைப்பினால் பெற்ற வெற்றியாகும்.
ஹரீஸ், திறமையான அரசியல்வாதி. விளையாட்டுத்துறைப் பிரதியமைச்சராக இருந்து, விளையாட்டுத்துறைக்கு நிறையவே செய்திருக்கின்றார். அதன் தொடர்ச்சி தான் என்னுடைய விளையாட்டுத்துறை அமைச்சு. நான் உங்களுக்கு உதவி செய்ய இருக்கிறேன்.
நாம் இலங்கையர்கள் என்று சிந்திக்க வேண்டும். சிறுபான்மை, பெரும்பான்மை என்ற எண்ணத்தைத் தவிர்த்து நாம் ஒன்றென்று நினைத்து ஒரு கிரிக்கெட் அணி போன்று செயற்பட வேண்டும். அரசியல்வாதிகள் தான் இன, மத, மொழி ரீதியான பிரிவினைகளை விதைக்கின்றார்கள். மக்களின் வாக்குகளை இலக்கு வைத்து இப்படிச்செய்கின்றார்கள்.
பிரதியமைச்சர் ஹரீஸ், இளமையான துடி துடிப்புள்ள திறமையான தலைவர். கிழக்கு மாகாணத்தில் விளையாட்டுத்துறையூடாக மக்களுடைய வாழ்வியலில் சிறந்த மாற்றத்தைக் கொண்டு வர முடியுமென நம்புகின்றேன். அமைச்சர் என்ற வகையில், வடக்கு கிழக்கு அணிகளை, தெற்குப் பிரதேச அணிகளுடன் இணைத்து, விளையாட்டுப் போட்டிகளை நடாத்தி, சகோதரத்துவத்தையும் நட்பையும் வளர்க்க வேண்டுமென்ற எண்ணமுள்ளது.
பல நாடுகளில் குழுக்களுக்கிடையிலான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு, விளையாட்டு உறுதுணையாக இருக்கிறது. அதனடிப்படையில், தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு ‘ஸ்போர்ட்ஸ் பெஸ்ட் பவுண்டேஷன்’ பாடுபட வேண்டும் என்றார்.