மீண்டும் விடுதலைப்புலிகளை உருவாக்க வேண்டும் என்ற ஆளும் ஐ. தே. க. அமைச்சர் விஜயகலாவின் துணிச்சலான கூற்று அவரை அரசாங்கத்தால் கட்டுப்படுத்த முடியாத துணிச்சலான பெண் என்பதை காட்டியுள்ளது என உலமா கட்சியின் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.
இது விடயமாக அவர் இன்று (03) வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
விடுதலைப்புலிகளின் போராட்ட வழி பிழையாக இருந்த போதும் இந்த நாட்டின் சிறுபான்மை மக்கள் சம உரிமை பெற வேண்டும் என்ற இலக்கை யாரும் மறுக்க முடியாது.
அதே போல் விஜயகலா கூறுவது போல் புலிகள் காலத்தில் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் கட்டுப்பாட்டில் இருந்தது உண்மைதான். ஆனாலும் முதியோர் பலரின் உயிர் துஷ்பிரயோகம் செய்யப்பட்டது என்பதையும் யாரும் மறுக்க முடியாது.
அரசாங்கம் விடுதலைப்புலிகள் இயக்கத்தை பயங்கரவாத இயக்கமாக கருதுகிறது. ஆனால் அரசாங்கத்தின் அமைச்சராக இருந்து கொண்டே மீண்டும் விடுதலைப்புலிகள் உருவாக வேண்டும் என சொல்வதற்கு கடுமையான துணிச்சல் வேண்டும்.
பொதுவாக ரணில் விக்ரமசிங்க புலி ஆதரவாளர் என்ற கருத்தும் உண்டு. அதனால் ஏற்பட்ட உந்துதலும் இப்பேச்சுக்கு வழி வகுத்திருக்கலாம். புலிகள் இருந்த போது வடக்கு கிழக்கில் முஸ்லிம்கள் கஷ்டப்பட்ட போதும் தென்னிலங்கை முஸ்லிம்கள் ஞானசார போன்ற இனவாதிகளின் துன்பமின்றி வாழ்ந்தார்கள். கிழக்கில் புலிகளால் பல பள்ளிவாயல்கள் சிதைக்கப்பட்ட போதும் தென்னிலங்கையில் எந்தப்பள்ளிவாயலும் சிங்கள இனவாதிகளின் கல்லெறிக்கு முகம் கொடுக்கவில்லை.
எது எப்படியிருந்த போதும் அமைச்சர் விஜயகலாவின் கருத்து நிச்சயம் ஆளும் ஐ தே கவின் கருத்தாகவே பார்க்கப்பட வேண்டும்.