வர்த்தகர்கள் ஒத்துழைக்கா விட்டால் கல்முனை சந்தை நரகக் குழியாக மாறிவிடும்; முதல்வர் றகீப் எச்சரிக்கை



அஸ்லம் எஸ்.மௌலானா-

ல்முனை பொதுச் சந்தையை புனரமைப்பு செய்வதற்கு வர்த்தகர்கள் அனைவரும் கருத்தொருமிப்புடன் ஒத்துழைப்பு வழங்க முன்வரா விட்டால் இச்சந்தை நரகக் குழியாக மாறிவிடும் என கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்துள்ளார்.

கல்முனை பொதுச் சந்தை வர்த்தகர் சங்கத்தின் ஒன்றுகூடலும் வர்த்தகர்களுக்கான அடையாள அட்டை விநியோக நிகழ்வும் இன்று சங்கத் தலைவர் ஏ.பி.ஜமாலதீன் தலைமையில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அங்கு அவர் தனதுரையில் மேலும் கூறியதாவது;

"கல்முனை மாநகர சபையின் மிகப்பெரிய சொத்துக்களில் ஒன்றே இப்பொதுச் சந்தையாகும். இது சுமார் ஐநூறு கடைகள் கொண்ட பாரிய வர்த்தக மையமாகும். இப்பிராந்தியத்தின் அபிவிருத்திக்காக மாநகர சபைக்கு பாரிய வருமானத்தை ஈட்டிக்கொடுத்து, முதுகெலும்பாக இருக்க வேண்டியதொரு சந்தைத் தொகுதியாகும். ஆனால் அப்படியொரு பங்களிப்பை செய்யுமளவுக்கு இங்குள்ள வர்த்தகர்களின் மனநிலை இல்லையென்பது கவலைக்குரிய விடயமாகும்.

சில தினங்களுக்கு முன்னர் கல்முனையின் அபிவிருத்தி தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநரை நான் சந்தித்து கலந்துரையாடியபோது, கையில் வெண்ணையை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைவது போன்று எமது நிலைப்பாடு இருப்பதாக அவர் என்னிடம் கூறினார். இந்த சந்தையில் உள்ள ஒரு கடையை, அண்மையில் ஐம்பது இலட்சம் ரூபா முற்பணத்துடன் ஐம்பதாயிரம் ரூபா மாத வாடகைக்கு கொடுப்பதற்காக குறித்த கடையின் பயனாளியினால் சட்டத்தரணி ஒருவர் மூலம் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டிருப்பதாக ஆளுநர் சுட்டிக்காட்டினார்.

இன்னும் சிலர் சந்தைக் கடைகளை தமது பிள்ளைகளுக்கு சீதனமாக கொடுத்திருக்கின்றனர் என்பதும் தெரிய வந்துள்ளது. இவையெல்லாம் நியாயமான விடயங்கள்தானா என்பதை உங்கள் மனச்சாட்சியைத் தொட்டு சொல்லுங்கள்.

1978 ஆம் ஆண்டு இந்த சந்தை நிர்மாணிக்கப்பட்ட பின்னர் கடைகளை பெறுகின்றபோது செய்யப்பட்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் 150 ரூபா தொடக்கம் 350 ரூபா வரையான மாதாந்த வாடகையையே இன்றும் செலுத்தி வருகிறீர்கள். அதிலும் வருடக் கணக்கில் நிலுவை வைத்துள்ளீர்கள். அன்றைய நாணயப் பெறுமதிக்கும் இன்றைய நாணயப் பெறுமதிக்கும் எந்தளவு வேறுபாடு என்பது எல்லோருக்கும் தெரியும்.

அதனால்தான் 2016 ஆண்டு அரசாங்க மதிப்பீட்டு திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட வாடகையை அறவீடு செய்ய வேண்டும் என எமது மாநகர சபைக்கு கணக்காய்வுப் பிரிவினரால் தொடர்ச்சியான அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆளுநரும் இதனை என்னிடம் வலியுறுத்தியுள்ளார்.

இந்த சந்தையினால் கல்முனை மாநகர சபைக்கு வருடமொன்றுக்கு என்பது இலட்சம் ரூபா மாத்திரமே வருமானமாக கிடைக்கிறது. ஆனால் குறைந்தது எட்டு கோடி ரூபாவேனும் வருமானம் கிடைக்க வேண்டும். அதன் மூலம் அபிவிருத்திகள் முன்னெடுக்க வேண்டும். அந்த நிலைக்கு நாம் முன்னேற வேண்டும்.

கல்முனை பொதுச் சந்தை கட்டிடத் தொகுதி புனரமைப்பு தாமதமடைந்திருப்பது தொடர்பில் வர்த்தகர்களிடம் பெரும் அங்கலாய்ப்பு காணப்படுகிறது. திட்டமிட்ட அடிப்படையில் முறையாக செய்யப்பட வேண்டும் என்பதனாலும் வர்த்தகர்களிடம் ஒருமித்த கருத்து இல்லாதிருப்பதுமே இதன் புனரமைப்பு தாமதமடைந்துள்ளமைக்கு காரணம் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

முன்னைய முதல்வர்களும் இதற்காக பாரிய முயற்சிகளை எடுத்துள்ளனர். முன்னாள் முதல்வர் நிசாம் காரியப்பர் மேற்கொண்ட முயற்சியினால் நகர அபிவிருத்தி அமைச்சினால் நிதியொதுக்கீடு செய்யப்பட்டிருந்த போதிலும் அது போதாதென்று கூறப்பட்டது. பிரதி அமைச்சர் ஹரீஸ் முதல்வராக இருந்தபோது ஆசிய அபிவிருத்தி வங்கி நிதி வழங்க முன்வந்தது. வர்த்தகர்களின் முரண்பாடான நிலைப்பாடு காரணமாக அம்முயற்சி வெற்றியளிக்கவில்லை.

நான் முதல்வராக பதவியேற்று முதல் வேலையாக எமது தலைவர்- அமைச்சர் ரவூப் ஹக்கீம், பிரதி அமைச்சர் ஹரீஸ் ஆகியோரிடம் இவ்விடயம் பற்றியே கலந்துரையாடினேன். அவர்கள் இது விடயத்தில் மிகவும் கரிசனையாக இருக்கின்றனர்.

அதேவேளை கல்முனை நகர அபிவிருத்தி திட்ட வரைபில் புதிய சந்தைத் தொகுதியை அமைக்க முன்மொழியப்பட்டிருக்கிறது. ஆனால் புதிய இடத்தில் சந்தையை அமைப்பதா அல்லது இருப்பதை புனரமைப்பதா என்பது தொடர்பில் நம்மிடையே கருத்து முரண்பாடு நிலவுகிறது.

தற்போதைய சந்தைக் கட்டிடத்தை புனரமைப்பு செய்வதானால் இரண்டு வருடங்கள் சந்தை வியாபாரத்தை வேறொரு இடத்திற்கு மாற்ற வேண்டும். அதற்கும் எல்லோரும் உடன்படுவதாக இல்லை.

ஆகையினால் இது தொடர்பில் ஆராய்ந்து இறுதி முடிவொன்றை எடுப்பதற்காக நகர திட்டமிட அமைச்சில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் பிரதி அமைச்சர் ஹரீஸ், மாநகர சபை உறுப்பினர்கள், வர்த்தக சங்கப் பிரதிநிதிகள் எல்லோரும் பங்குபற்றும் கலந்துரையாடல் ஒன்று திங்கட்கிழமை ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் சந்தையின் பாரிய புனரமைப்புக்கு முன்னதாக இருக்கின்ற சந்தையை திருத்த வேலைகளுடன் அவசரமாக ஒழுங்கமைக்க வேண்டிய தேவை உள்ளது. அதற்கு வர்த்தகர்கள் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும். அந்த வகையில் சந்தையின் உள்ளேயும் வெளியேயும் சட்டவிரோத கட்டுமானங்களையும் சட்டவிரோத வியாபார நடவடிக்கைகளையும் அகற்றி, சந்தையை சீரமைப்பதற்கு முன்வாருங்கள்.

சந்தையின் வெளிப்புறத்தில் ஒவ்வொரு கடைக்கு முன்னாலும் இன்னொரு வியாபாரத்திற்கும் அதற்கு முன்னால் பேமண்ட் வியாபாரத்திற்கும் வாடகைக்கு வழங்கியுள்ளீர்கள். உங்கள் மனச்சாட்சியை தொட்டுக் கேளுங்கள். இது பெரும் அநியாயமாகும்.

அது மாத்திரமல்லாமல் மாநகர சபையிடம் குறைந்த வாடகைக்கு பெற்ற கடையை நீங்கள் இன்னொருவருவருக்கு பெருந்தொகைக்கு வாடகைக்கு கொடுத்துள்ளீர்கள். பிள்ளைகளுக்கு சீதனமாகவும் கொடுத்துள்ளீர்கள். இந்த சந்தையில் மாபியா இருப்பதாக சொல்லப்படுகிறது.

இது உங்களுக்கு சொந்தமான கடையென்று நீங்கள் நினைத்துக் கொள்ள வேண்டாம். இன்னும் நூறு வருடங்கள் நீங்கள் இந்தக் கடைக்குரியவர்களாக இருந்தாலும் கடை உங்களுக்கு உரித்துடையதாக மாட்டாது. அதற்கு ஆட்சியுரிமை சட்டம் ஏற்புடையதாகாது. இது எப்போதும் அரசாங்கத்துக்கே சொந்தமானதாகும். மாநகர சபையின் சொத்தாகவே இருக்கும்.

நீங்கள் ஒப்பந்தத்தை மீறி செய்கின்ற தவறான விடயங்களை மாநகர சபை முதல்வரும் அதிகாரிகளும் கண்டும் காணாமலும் இருந்து விட்டு செல்கின்றனர். மாநகர சபையினால் எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று நீங்கள் நினைத்து விடக் கூடாது. அவ்வாறு நடவடிக்கை எடுக்க முற்பட்டால் கடைகளில் இருப்போர் வெளியேற வேண்டியேற்படும். நாம் அதிகாரத்தையோ சட்டத்தையோ பிரயோகிக்க முற்படவில்லை. பிரச்சினைகளுக்கு புரிந்துணர்வுடன் தீர்வு காணவே விரும்புகின்றோம்.

ஆகையினால் சந்தையை ஒழுங்கமைப்பதற்கும் புனரமைப்பதற்கும் முழுமையான ஒத்துழைப்பைத் தாருங்கள். இல்லாவிடின் இந்த சந்தை நரகத்தின் குழியாகவே இருக்கும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

குப்பை அகற்றப்படுவதில்லை என மாநகர சபை மீது விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. கல்முனையை நான்கு வலயங்களாக பிரித்து 68 ஊழியர்களையும் 12 வாகனங்களையும் மாத்திரம் வைத்துக் கொண்டு முடியுமானவரை அப்பணியை சிறப்பாக முன்னெடுத்தே வருகின்றோம். இதற்காக கோடிக்கணக்கில் செலவிடப்படுகிறது.

குப்பை கொட்டுவதற்கு எமது மாநகர சபை எல்லைக்குள் இடமொன்று இல்லாமையினால் அட்டாளைச்சேனை பள்ளக்காட்டுக்கு கொண்டு சென்று பணம் செலுத்தியே எமது குப்பையை கொட்டுகின்றோம். வெளியில் இருந்து கொண்டு விமர்சிப்போருக்கு இதிலுள்ள சிரமங்கள், சவால்கள் பற்றி எதுவும் தெரியாது.

குப்பை அகற்றுகின்ற விடயத்தில் பொது மக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமாகும். குப்பைகளை வகைப்படுத்தி கையளிக்க வேண்டும். பொலித்தீன், பிளாஸ்ட்ரிக் கழிவுகளை வேறுபடுத்தி வையுங்கள். அவ்வாறாயின் உக்கும் கழிவுகளை மாத்திரம் உடனுக்குடன் இலகுவாக சேகரித்து அகற்றலாம்.

பிளாஸ்ட்ரிக் கழிவுகளினால் கால நிலைக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதனால் சூழல், குடிநீர், கடல் என்று எல்லாமே மாசடைகின்றன. மனித உயிர்களுக்கும் ஆபத்தானதாக மாறியுள்ளது. இதற்காக ஐக்கிய நாடுகள் சபை பாரிய திட்டங்களை வகுத்துள்ளது. எல்லோரும் பொறுப்புடன் நடந்து கொண்டால் மாத்திரமே அவை வெற்றியளிக்கும்" என்றும் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜே.கே.எஸ்.ஜெயநதி, கல்முனை மாநகர சபையின் ஆணையாளர் ஜே.லியாகத் அலி, மாநகர சபை உறுப்பினர்களான எம்.எம்.நிசார், ஏ.எம்.பைரூஸ், சுகாதார பிரிவு தலைமை உத்தியோகத்தர் ஏ எம்.எம் அஹ்சன், பொதுச் சுகாதார பரிசோதகர் ஜே.எம்.நிஸ்தார், பிர்லியண்ட் பளீல், ஆகியோரும் அதிதிகளாக பங்கேற்றிருந்ததுடன் சந்தை வர்த்தகர் சங்கத்தின் பிரதி தலைவர் ஏ.எச்.ரஸ்ஸாக், செயலாளர் ஏ.எல்.கபீர் உள்ளிட்ட பிரதிநிதிகளும் வர்த்தகர்களும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -