கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி மற்றும் வாழைச்சேனை ஆகிய பிரதேச சபைகளின் நிர்வாக எல்லைகளுக்குட்பட்ட முகைதீன் போடியார் வீதியை புனர்நிர்மாணம் செய்து தரும்படி அப்பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இவ் வீதியை புனர்நிர்மாணம் செய்து தரும்படி பலவருடங்களாக முயற்ச்சிகள் எடுத்தும் எதுவித பயனும் இதுவரையில் கிடைக்கப்பெறவில்லை எனவே மிகநீண்ட காலங்களாக கவனிப்பாரற்ற நிலையில் காணப்படும் இவ் வீதியினை புனர்நிர்மாணம் செய்யக் கோரி அப்பிரதேசத்திலுள்ள மக்கள் ஒன்றினைந்து அரசியல்வாதிகளிடமும் அரச அதிகாரிகளிடமும் இவ் வீதியினை புனர்நிர்மாணம் செய்து தரும்படி கோரிக்கை விடுத்ததோடு மகஜர் போன்றவற்றையும் ஒப்படைத்துமுள்ளனர்.
குறித்த இவ் வீதியானது மழை காலங்களில் நீர் வடிந்தோடாத நிலையில் காணப்படுவதோடு இவ் வீதியில் நீர் தேங்கி நிற்பதால் வீதி மிகவும் மோசமாக காணப்படுவதோடு குறித்த வீதியால் அப்பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளுக்குச் செல்லும் மாணவர்களுக்கு பல்வேறுபட்ட அசௌகரிகங்கள் ஏற்படுவதாக பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
எனவே இவ் வீதியின் முக்கியத்துவம் கருதி அப் பிரதேச மக்கள் எவ்வித இடையூறுமின்றி பயணிப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் அரசியல் தலைமைகளும் கூடுதல் கவனமெடுத்து குறித்த வீதியினை புனர்நிர்மாணம் செய்து தரும்படி அப் பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.