நிறைவேற்று ஜனாதிபதி முறைமை ஒழிப்பு சாதகமா? பாதகமா?
பாகம்-3
=============================
சிறுபான்மையின் தயவில்லாமல் ஜனாதிபதி ஆக முடியுமா? - தொடர்ச்சி
நான்காவது ஜனாதிபதித் தேர்தல்
——————————————
இது 1999ம் ஆண்டு டிசம்பர் மாதம் 21ம் திகதி நடைபெற்றது.
பிரதான போட்டியாளர்கள்- சந்திரிக்கா பண்டாரநாயக்க, ரணில் விக்ரமசிங்க
வாக்களிப்பு வீதம்- 73.31
சந்திரிக்கா- 4,312,157 (51%,) ரணில்- 3,602,748 (42.71%)
மு கா சந்திரிக்காவை ஆதரித்தது.
சந்திரிக்கா 50% ஐ சொற்ப அளவே தாண்டியிருப்பதால் சிறுபான்மை வாக்குகளின் முக்கியத்துவம் புலப்படுகின்றது.
ஐந்தாவது ஜனாதிபதித் தேர்தல்
—————————————-
இது 2005ம் ஆண்டு நவம்பர் மாதம் 17ம் திகதி நடைபெற்றது.
பிரதான போட்டியாளர்கள்- மஹிந்த ராஜபக்ச, ரணில் விக்ரமசிங்க.
வாக்களிப்பு வீதம்- 73.73
மஹிந்த- 4,887,152 வாக்குகள் ( 50.29%)
ரணில்- 4, 706,366 வாக்குகள் ( 48.43)
இங்கு கவனிக்க வேண்டியது- விடுதலைப்புலிகளின் உத்தரவின் காரணமாக தமிழ் மக்கள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை. முஸ்லிம்கள் வழமைபோன்று பெரும்பான்மையாக ஐ தே கட்சிக்கே வாக்களித்தார்கள். ( மு கா வும் ரணிலையே ஆதரித்தது).
இங்கு கவனிக்கவேண்டிய ஏனைய விடயங்கள்
—————————————————
1)இரு வேட்பாளர்களுக்கும் இடையேயுள்ள வித்தியாசம் 2% இற்கும் குறைவாகும். தமிழ் மக்கள் ரணில் விக்ரமசிங்கவுக்கு வாக்களித்திருந்தால் அவர் இலகுவாக வெற்றிபெற்றிருப்பார். எனவே, மஹிந்த ராஜபக்ச குறிப்பிடத்தக்களவு சிறுபான்மை வாக்கில்லாமல் கிட்டத்தட்ட பெரும்பான்மை சமூகத்தின் வாக்குகளைக் கொண்டே வெற்றிபெற்ற போதிலும் சிறுபான்மை ஒற்றுமைப்பட்டு ஒரு பக்கம் வாக்களித்தால் அங்கு சிறுபான்மை வாக்கிற்கு ஒரு பலம் இருக்கின்றது; என்பதாகும்.
2)சிறுபான்மை சமூகங்கள் பிரிந்து வாக்களித்தாலோ, ஒரு சமூகம் வாக்களிப்பிலிருந்து ஒதுங்கினாலோ, தனித்து சிறுபான்மையின் ஒரு பிரிவின் வாக்குப்பலம் பெரியதொரு தாக்கத்தைச் செலுத்தாது சில நேரங்களில் விதிவிலக்காக இருந்தாலும் கூட; என்பதாகும். அதேநேரம் சகல சிறுபான்மைகளும் எல்லாநேரங்களிலும் ஒருமித்த நிலைப்பாட்டையே எடுக்கும் என்பதற்கும் உத்தரவாதமில்லை; என்பதையும் இத்தேர்தல் நிரூபிக்கின்றது.
3)அவ்வாறு சகல சிறுபான்மைகளும் ஒன்றுபட்டு வாக்களித்திருந்தாலும் வெற்றிபெறத்தேவையான 50% விகிதத்தை வழங்குவதற்கு கிட்டத்தட்ட சிங்கள மக்கள் ஒற்றுமைப்பட்ட ஒரு தேர்தல் இது என்பதையும் இத்தேர்தல் நிறுவுகின்றது.
6வது ஜனாதிபதித் தேர்தல்
————————————
இத்தேர்தல் 2010ம் ஆண்டு ஜனவரி மாதம் 26ம் திகதி நடைபெற்றது. பிரதான போட்டியாளர்கள்- மஹிந்த ராஜபக்ச, சரத்பொன்சேகா
மஹிந்த- 6,015,934 (57.88); பொன்சேகா- 4,173,185 (40.15)
( மு கா பொன்சேகாவை ஆதரித்தது)
இது யுத்த வெற்றியைத் தொடர்ந்து நடைபெற்ற தேர்தல்.
இத்தேர்தலில் தமிழ் மக்கள் மஹிந்தவுக்கு வாக்களிக்கவில்லை. முஸ்லிம்கள் வழமையைவிட சற்று அதிகமாக மஹிந்தவுக்கு ( ஶ்ரீ சு கட்சிக்கு) யுத்த வெற்றிக்கு நன்றிக்கடனாக வாக்களித்தார்கள்; என்று அப்பொழுது கூறப்பட்டது. இருந்தாலும் மு கா, ஐ தே கட்சியை ஆதரித்த நிலையிலும் வட கிழக்கிற்கு வெளியேயுள்ள முஸ்லிம்களின் பரம்பரையான ஐ தே கட்சி சார்பான நிலைப்பாட்டினாலும் பெரும்பான்மை முஸ்லிம் வாக்குகள் பொன்சேகாவுக்கே கிடைத்தன.
மஹிந்த பெற்ற வாக்குகள் 57.88% எனில் மேலதிக வாக்குகள் 7.88, கிட்டத்தட்ட 8% ஆகும். இதில் முஸ்லிம் வாக்குகள் இரண்டு அல்லது மூன்று விகிதம் என்றாலும் மலையக வாக்குகள் ஒரு 4% என்றாலும் ( இவை அபரிமித எடுகோளாகும்) தமிழ் மக்கள் வாக்களிக்காத நிலையில் 50% விகிதத்திற்கு மேல் தனிச் சிங்கள மக்களின் வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்ற தேர்தலாகும் காரணம் எதுவாக இருந்தபோதிலும்கூட.
எனவே, நாம் இதுவரை பார்த்த 6 ஜனாதிபதித் தேர்தல்களில் இரண்டு தேர்தல்களில் ( 1994- சந்திரிக்கா, 2010- மஹிந்த) சிறுபான்மைகளின் வாக்குகளின் தேவையின்றி ஜனாதிபதி தெரிவுசெய்யப்பட்டிருக்கின்றார்.
7வது ஜனாதிபதித் தேர்தல்
————————————
இதுதான் இறுதியாக 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் 8ம் திகதி நடைபெற்ற தேர்தலாகும். பிரதான போட்டியாளர்கள் மைத்திரிபால சிறிசேன மற்றும் மஹிந்த ராஜபக்ச.
வாக்களிப்பு வீதம் 81.52
மைத்திரீ-6,217,162 (51.28%);
மஹிந்த-5,768,090 (47.58%)
2011ம் ஆண்டின் குடிசன மதிப்பீட்டின்படி இலங்கையில் இனரீதியாக,
சிங்களவர்கள்-74.9
இலங்கைத் தமிழர்கள்-11.2
இலங்கைச் சோனகர்கள்-9.2
இந்தியத் தமிழர்-4.2
ஏனையவர்கள்-0.5 வாழ்கிறார்கள்.
மதரீதியாக,
பௌத்தர்கள்-70.2
இந்துக்கள்-12.6
முஸ்லிம்கள்-9.7
ரோமன் கத்தோலிக்கர்கள்-6.1
ஏனைய கிறிஸ்தவர்கள்-1.3
மஹிந்தவின் ஆட்சியில் பலசேனாக்கள் சகல மதத்தலங்களையும் தாக்கியிருந்தார்கள். மொத்த மதரீதியான சிறுபான்மையும் மஹிந்தவை எதிர்த்தது. இந்நிலையில் 30% மதரீதியான சிறுபான்மை கிட்டத்தட்ட முழுமையாக ஒற்றுமைப்பட்டு மஹிந்தவுக்கெதிராக வாக்களித்தும் மைத்திரியால் 51.28% வாக்குகளைத்தான் பெறமுடிந்தது. அதாவது 50% ஐ ஒரு சிறிய வித்தியாசத்தினால்தான் தாண்டமுடிந்தது.
மொத்த சிறுபான்மையும் எப்பொழுதும் இவ்வாறு ஒற்றுமைப்படுவார்கள்; எனக் கூறமுடியாது. அடுத்த தேர்தலில்கூட இவ்வாறான ஒரு ஒற்றுமையை எதிர்பார்க்க முடியாது. மறுபுறம் இவ்வாறு சிறுபான்மையின் ஒற்றுமைக்கு மத்தியிலும் மஹிந்த ராஜபக்சவினால் 47.58% வாக்குகளைப்பெற முடிந்தது.
மாதுலுவே சோபித தேரர் போன்ற சிங்கள மக்களுக்கு மத்தியில் மிகவும் செல்வாக்குப்பெற்ற பௌத்த மதகுருக்கள் மைத்திரியை ஆதரித்தது ஓரளவு மிதவாத சிங்கள மக்களை மைத்திரியின் பக்கம் திருப்பியது. இல்லையெனில் சிலவேளை தேவையான மேலதிக 2.42% வாக்குகளையும் சிங்கள மக்களிடமிருந்து மஹிந்த பெற்றிருக்கலாம்.
அவ்வாறு பெற்றிருந்தால் ஒட்டுமொத்த சிறுபான்மை எதிர்த்தும் தனிச்சிங்கள மக்களின் வாக்குகளினால் தெரிவுசெய்யப்பட்ட ஜனாதிபதியாக மஹிந்த இருந்திருப்பார். இன்று சிறுபான்மைகளின் நிலை மிகவும் மோசமாக இருந்திருக்கும்.
இங்கு சுட்டிக்காட்ட விளைவது என்னவென்றால் சிறுபான்மையின் ஆதரவு இல்லாமல் ஒருவர் ஜனாதிபதியாக வரவே முடியாது; எனவே, ஜனாதிபதிப் பதவி சிறுபான்மைகளுக்கு சாதகமானது; என்ற ஒரு மாயை முஸ்லிம்களுக்கு மத்தியில் இருக்கின்றது; அது சிலவேளை உண்மையாக இருந்தாலும் எல்லா நேரங்களிலும் உண்மையில்லை; என்பதேயாகும்.
குறிப்பாக, இன்று இனவாதம் உச்சக்கட்டத்தை அடைந்திருக்கின்ற ஒரு காலகட்டத்தில்,
சிங்களவர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட நாட்டின் ஆட்சியாளரைத் தீர்மானிப்பது சிறுபான்மையா? என்ற இனவாத உணர்வு கிளர்ந்தெழுந்திருக்கின்ற ஒரு காலகட்டத்தில்,
சிறுபான்மை இல்லாமல் வெற்றிபெற முடியும்; என,தேசப்பற்றுள்ள இயக்கத்தின் தலைவர் குணதாச அமரதாச போன்றவர்கள் வெளிப்படையாக பேசி பிரச்சாரத்தை ஆரம்பித்திருக்கின்ற ஒரு காலகட்டத்தில்,
ஒரு காலத்தின் நட்சத்திர அரசியல் தலைவர்களான காமினி திசாநாயக்க, லலித் அத்துலத்முதலி போன்றவர்களாலேயே இந்நாட்டின் இரு கட்சி ஆட்சி முறைக்கு வேட்டுவைக்க முடியாமல்போனநிலையில் கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் இரு கட்சி ஆட்டசிமுறைக்கு மஹிந்தவினால் வேட்டுவைக்க முடியும்; என நிரூபிக்கப்பட்ட ஒரு காலகட்டத்தில்
சிறுபான்மைகளின் வாக்குகளின்றி கோட்டாவோ இன்னுமொருவரோ தெரிவுசெய்யப்பட்டால் நம் நிலைமை என்னவாகும்.
அதேநேரம் வெற்றபெறப்போகின்றவர் இனவாதி எனத்தெரிந்திருந்தும் அவருக்கு ஆதரவளித்து அவர் வெற்றபெற்றபின் இனவாத செயற்பாட்டில் இறங்கிவிட்டால் நிலைமை என்ன?
எனவே, ஜனாதிபதிப்பதவி ஒழிப்பு தொடர்பாக நாம் முடிவெடுக்கும்போது இவற்றையும் இவற்றோடு தொடர்புபட்ட இன்னும் பலவற்றையும் கவனத்தில் எடுத்துத்தான் முடிவெடுக்க வேண்டுமேதவிர கண்மூடித்தனமாக ஜனாதிபதிப்பதவி சிறுபான்மைகளுக்கு பாதுகாப்பானது; என்று கூறிக்கொண்டு வாளாவிருக்க முடியாது.
( தொடரும்)