இவ்வருடத்திற்கான கதிர்காம பாதயாத்திரையை மேற்கொள்ளுமுகமாக இன்று(10) வெள்ளிக்கிழமை மாலை 3மணியளவில் காரைதீவு ஸ்ரீ நந்தவன சித்திவிநாயக தேவஸ்தானத்திலிருந்து வழியனுப்புவிழா பக்திபூர்வமாக நடைபெறவிருக்கிறது.
காரைதீவு நந்தவனப்பிள்ளையார் கதிர்காம பாதயாத்திரைக்குழு இந்த ஏற்பாட்டைச் செய்துள்ளது.
உலக சைவத்திருச்சபையின் இலங்கைக்கான கிழக்குமாகாண இணைப்பாளரும் ஸ்ரீ நந்தவனப்பிள்ளையாhர் கதிர்காம பாதயாத்திரைக்குழுவின் தலைவருமான வேல்சாமி மகேஸ்வரன் குழுவினரை இன்று காரைதீவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வழியனுப்பும் நிகழ்வில் ஆலயதர்மகர்த்தாக்கள் இந்துசமய பிரதிநிதிகள் இந்து ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொள்வர்.
இன்று காரைதீவிலிருந்து பேருந்து மூலம் யாழ்ப்பாணம் செல்லும் வேல்சாமி குழுவினர் ஒருவாரகாலம் யாழ்ப்பாணம் செல்வச்சந்நதி ஆலயத்தில் தங்கியிருந்து சகல ஆயத்தங்களையும் மேற்கொள்வார்கள்.
பின்பு 17ஆம் வியாழக்கிழமை அதிகாலை சந்நிதியிலிருந்து கதிர்காமத்திற்கான 46வது பாதயாத்திரை பக்திபூர்வமாக ஆரம்பமாகின்றது என குழுச்செயலாளர் எம்.பாக்கியநாதன் தெரிவித்தார்.