மண்சரிவு அபாயம் காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் நுவரெலியா மற்றும் வலப்பனை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குட்பட்ட கந்தபளை கொங்கோடியா, இராகலை ஹல்கரனோயா மற்றும் ஹல்கரனோயா மத்திய பிரிவு ஆகிய தோட்டங்களில் இருந்த தொழிலாளர்கள் குடும்பங்களை தங்களின் குடியிருப்புக்களில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அண்மையில் பெய்த கடும் மழையை அடுத்து, ஏற்பட்ட அபாயம் காரணமாக கந்தபளை கொங்கோடியா, இராகலை ஹல்கரனோயா மற்றும் ஹல்கரனோயா மத்திய பிரிவு ஆகிய தோட்டங்களின் 48 குடும்பங்களைச் சேர்ந்த 233க்கும் மேற்பட்ட மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.
இவர்கள் தற்காலிகமாக தங்குவதற்காக பாடசாலைகள், ஆலய மண்டபங்கள், நூலக சாலை போன்றவற்றில் தங்க வைக்கப்பட்ட போதிலும், தற்போது அனர்த்தங்கள் இடம்பெறாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளதுடன், மீண்டும் தமது இருப்பிடங்களுக்கு செல்லுமாறு மக்களுக்கு அறிவித்துள்ளனர். மக்கள் தமது இருப்பிடங்களை நோக்கி செல்கின்ற பொழுதிலும், மீண்டும் மண்சரிவு ஏற்படக்கூடும் என அச்சதுடனையே இருக்கின்றனர். மேலும், கந்தபளை கொங்கோடியா தோட்டத்தில் பாதிக்கப்பட்ட 7 குடும்பங்களை சேர்ந்தவர்கள் தொடர்ந்தும், கொங்கோடியா தமிழ் வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் கடந்த இரு நாட்களாக குறித்த பாடசாலைகளில் தங்கியுள்ளனர். மேலும் சிலர் ஆலய மண்டபங்கள், நூலக சாலை, உறவினர்களின் வீட்டிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அத்தோடு, இராகலை ஹல்கரனோயா மற்றும் ஹல்கரனோயா மத்திய பிரிவு ஆகிய தோட்டங்களில் மண்சரிவு அபயாம் காரணமாக வெளியேற்றப்பட்டவர்கள், தமது இருப்பிடங்களை நோக்கி செல்கின்ற பொழுதிலும், எவ்வித அடிப்படை வசதியுமற்ற நிலையில் வாழ வேண்டிய இக்கட்டான சூழ்நிலையை எதிர்நோக்கியுள்ளனர்.
எனவே இப்பகுதியை சேர்ந்த அரசியல் தலைமைகள் இதற்கு உரிய நடவடிக்கை எடுத்து எங்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க வேண்டும் என்பதோடு, அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தித் தர வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.