நாட்டில் தீவிரமடைந்து வரும் டெங்கு நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக, மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கல்லூரியில் இன்று (16) விரிவான டெங்கு ஒழிப்பு மற்றும் சுத்திகரிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
கல்லூரி வளாகத்திலும் அதன் சுற்றுப்புறங்களிலும் டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய இடங்களை அடையாளம் கண்டு அவற்றை அகற்றும் பணிகள் இந்நிகழ்வின் போது மேற்கொள்ளப்பட்டன. மழைநீர் தேங்கக்கூடிய பாத்திரங்கள், தேவையற்ற கழிவுப் பொருட்கள் மற்றும் நுளம்பு பெருகுவதற்கு வாய்ப்புள்ள பகுதிகள் சுத்தம் செய்யப்பட்டதுடன், வளாகம் முழுவதும் சுகாதார விழிப்புணர்வுடன் கூடிய சிரமதானப் பணிகளும் இடம்பெற்றன.
இந்த டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் இலங்கை விமானப்படையின் மட்டக்களப்பு படைப் பிரிவு உத்தியோகத்தர்கள், மட்டக்களப்பு பொதுச் சுகாதார பரிசோதகர்கள் ஆகியோர் பங்கேற்று தொழில்நுட்ப ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் வழங்கினர்.
மேலும், மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கல்லூரியின் அதிபர் சீ. மொறின் தலைமையில் கல்விசார் மற்றும் கல்விசாரா உத்தியோகத்தர்கள், ஆசிரியர் பயிலுநர்கள் என அனைவரும் ஒன்றிணைந்து சிரமதானப் பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபட்டனர்.
டெங்கு நோயை கட்டுப்படுத்துவதில் தனிநபர் மற்றும் சமூகப் பொறுப்பு மிக முக்கியமானது என்பதையும், கல்வி நிறுவனங்கள் சுத்தமான மற்றும் ஆரோக்கியமான சூழலைப் பேணுவதன் மூலம் டெங்கு பரவலைத் தடுக்க முடியும் என்பதையும் இதன்போது பொதுச் சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தினர்.
இவ்வாறான சுத்திகரிப்பு மற்றும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுவதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பாதுகாப்பான கல்விச் சூழலை உறுதிப்படுத்துவதுடன், டெங்கு நோயைக் கட்டுப்படுத்தும் தேசிய முயற்சிக்கும் வலுச்சேர்க்கும் என கல்லூரி நிர்வாகம் தெரிவித்தது.






0 comments :
Post a Comment