கல்முனை சந்தாங்கேணி விளையாட்டு மைதானத்தின் இரண்டாம் கட்ட அபிவிருத்தி பணிககளை ஆரம்பிக்கும் வகையில் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீஸ் தலைமையிலான கட்டடக்கலை நிபுணர் குழு குறித்த மைதானத்திற்கு நேற்று (27) சனிக்கிழமை களவிஜயம் மேற்கொண்டனர்.
இக்களவிஜயத்தின்போது கட்டடக்கலை வடிவமைப்பு நிபுணர் சேனக்க, தொழில்நுட்ப நிபுணர் வித்தியாரத்ன, கல்முனை மாநகர சபை ஆணையாளர் ஜே. லியாகத் அலி, கல்முனை மாநகர சபை பொறியியலாளர் ரி. சர்வானந்தா, விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் அல்தாப் ஹூசைன், விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர் நௌபர் ஏ. பாவா ஆகியோர் பிரசன்னமாகியிருந்தனர்.
ஸ்ரீலங்கா முஸ்லிகாங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி அல்ஹாஜ் எச்.எம்.எம். ஹரீஸின் வேண்டுகோளுக்கு அமைவாக கல்முனை சந்தாங்கேணி விளையாட்டு மைதானம் விளையாட்டுத்துறை அமைச்சினால் அபிவிருத்தி செய்யப்பட்டுவருகின்றன. குறித்த அபிவிருத்தி பணியினை பூரணப்படுத்துவதற்கு ஏதுவாக 2018ஆம் ஆண்டிற்கான அரசின் வரவு செலவு திட்டத்தில் 255 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதற்கமைவாக குறித்த மைதான அபிவிருத்தி பணியின் இரண்டாம் கட்ட வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கும்வகையில் மேற்படி குழுவினர் களவிஜயம் செய்தனர். இதன்போது பிரதான பார்வையாளர் அரங்கு அமைவிடம், முக்கிய பிரதிநிதிகள் நுழைவாயில் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டது. இவ்வேலைத்திட்டமானது விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.