தலவாக்கலை பி.கேதீஸ்-
காபட் வீதி அமைப்பதற்கு நிதியொதுக்கீடு செய்யப்பட்டபோதிலும் காபட் இடாமல் தார் இடப்பட்டு வீதி புனரமைக்கப்படுவதால் ரதெல்ல மற்றும் வங்கிஓயா தோட்ட மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
மலையக புதிய கிராமங்கள்,உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் ஒரு கோடி இரண்டு இலட்சத்து நாற்பத்து ஏழாயிரம் ரூபா (10204704.40) நிதியொதுக்கீட்டின் கீழ் கார்லிபேக்கிலிருந்து ரதெல்ல சிறுவர் பராமரிப்பு நிலையம் வரை 1.5 கிலோமீற்றர் வீதி காபட் இடுவதற்கு நிதியொதுக்கீடு செய்யப்பட்டு தற்போது புனரமைப்பு பணிகள் நடைப்பெற்று வருகின்றன. ஆனால் காபட் வீதிக்கு பதிலாக தார் இடப்பட்டு வீதி புனரமைக்கப்படுவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
குறித்த வீதியின் புனரமைப்பு பணிகள் மனித வள அபிவிருத்தி நிறுவனத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.இவ் வீதி தார் இடப்பட்டு புனரமைக்கப்பட்டு வருவதும் தரமானதான அமைக்கப்படவில்லை என மக்கள் குற்றம் சுமத்துகின்றனர். தார் இடப்பட்ட வீதி கடந்த வாரம் பெய்த மழையினால் ஆங்காங்கே உடைந்தும் சிதறியும் அரித்தும் சென்றுள்ளது. எனவே இவ்வீதியின் புனரமைப்பு பணிகள் திருத்திகரமானதாக இல்லை என நுவரெலியா மனித வள அபிவிருத்தி நிறுவனத்திடம் தோட்ட மக்கள் முறையிட்டுள்ளனர்.
எனவே குறித்த வீதிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதிக்கு அமைவாக காபட் வீதி இடபடவேண்டும் என தோட்ட மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.எனவே இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


