இஸ்ரேலின் தலைநகராக டெல் அவிவ் நகரத்தையே இலங்கை ஏற்றுக் கொண்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும் சுகாதார மற்றும் சுதேச மருத்துவ அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
எமது முடிவில் மாற்றமில்லை, எமது தூதரகமும் டெல் அவிவிலேயே தொடர்ந்தும் இருக்கும் என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.அத்துடன், எமது நாட்டின் நிலைப்பாது தொடர்பில் அரசாங்கம் உடனடியாக மிகச் சிறந்த அறிவித்தலொன்றை விடுத்தது என்பதை பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவர் எனும் வகையில் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஐரோப்பாவும் இது தொடர்பான அறிவித்தலுக்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. தங்களது தூதரகத்தை ஜெருசலத்திற்கு எடுத்துச் செல்வது தொடர்பான முடிவில் அமெரிக்கா தனிமைப்பட்டுள்ளதோடு, வேறு எந்தவொரு நாடும் அமெரிக்காவின் அறிவிப்பு தொடர்பில் கரிசனை கொள்ளவில்லை.இது தொடர்பில் அனைத்து அரசியல் கட்சிகள், ஏனைய அமைப்புகள் மற்றும் பலஸ்தீன ஆதரவு இயக்கங்கள் இணைந்து, எதிர்வரும் வெள்ளிக்கிழமை (15) புதிய நகர மண்டபத்தில் பாரிய பேரணியொன்றை ஏற்பாடு செய்துள்ளோம். அத்துடன் நகர மண்டபத்தில் குறித்த விடயம் தொடர்பான எமது நிலைப்பாடு தொடர்பில், மக்களுக்கும், உலகத்திற்கும் தெளிவூட்டும் வகையிலான கூட்டமொன்றையும் ஏற்பாடு செய்துள்ளோம் என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
