என்.எம்.அப்துல்லாஹ்-
கண்டி/தெனுவர/அல்மனார் தேசிய பாடசாலையின் கல்விப் பொதுத்தராதர பரீட்சை மத்திய நிலையத்தில் தமிழ் மொழிமூலம் சித்திரப்பாடப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கு; பரீட்சை நிலைய மேற்பார்வையாளர் வழங்கிய சித்திரப் பரீட்சை தொடர்பான வழிகாட்டுதல்கள், அதே நிலையத்தில் இடம்பெற்ற மற்றொரு பரீட்சை மண்டப வழிகாட்டல்களோடு முரண்பட்டதாக காணப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பரீட்சை மேலாளருக்கு மாணவர்கள் முறையீடு செய்தபோது, பரீட்சைநிலைய மேற்பார்வையளரது தவறு வெளிப்பட்டிருக்கின்றது, எனினும் குறித்த விடயத்தில் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படாதவண்ணம் விடயங்களைக் கையாள்வதற்கு எவ்வித உத்தரவாதத்தினையும் உடனடியாக வழங்க முடியாது என பரீட்சை நிலைய மேலாளர் தெரிவித்துள்ளார்.
இதுவிடயத்தை பாடசாலை அதிபர் அவர்களின் கவனத்திற்குக் கொண்டுவந்த போதிலும், பரீட்சை நிலைய மேற்பார்வையாளர் சிங்கள மொழிமூலம் வழிகாட்டுதல்கள் வழங்கியமையால் சிலவேளை மாணவர்கள் அதனைத் தவறாக விளங்கியிருக்க முடியும் என்ற கருத்தையும் அவர் முன்வைத்துள்ளார்.
எது எவ்வாறாயினும் மாணவர்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள் என்பதை மாத்திரம் எம்மால் அறியமுடிகின்றது. இதுவிடயம் தொடர்பில் பெற்றோர் பரீட்சைத் திணைக்களத்திற்கு முறைப்பாடொன்றினை எழுத்துமூலம் வழங்குவதற்கு முயற்சித்து வருகின்றார்கள் என்றும் அறியமுடிகின்றது.
எது எவ்வாறாயினும் பாதிக்கப்பட்ட மாணவர்களின் நிலைமைகள் துரிதமாக உரிய உயர் அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டு அவர்களுக்கு உரிய தீர்வுகள் உடனடியாக முன்வைக்கப்படுதல் அவசியமாகும் என்பதே பெற்றோரது எதிர்பார்ப்பாக இருக்கின்றது.
