அகமட் எஸ். முகைடீன்-
பொத்துவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட விளையாட்டு கழகங்களுக்கு விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீஸினால் விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பொத்துவில் பிரதேச அமைப்பாளரும் பொத்துவில் பிரதேச சபை முன்னாள் தவிசாளருமான எம்.எஸ்.ஏ. வாஷித் தலைமையில் இன்று (8) வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி அல்ஹாஜ் எச்.எம்.எம். ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர் நௌபர் ஏ. பாவா, பொத்துவில் பிரதேச சபை முன்னாள் உறுப்பினர்கள், பிரதேச விளையாட்டுக் கழகங்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது விளையாட்டுத் திறணை விருத்தி செய்யும்வகையில் பொத்துவில் பிரதேசத்தைச் சேர்ந்த 24 விளையாட்டுக் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் பிரதி அமைச்சர் ஹரீஸினால் வழங்கிவைக்கப்பட்டது.
எதிர்வரும் ஆண்டின் ஆரம்ப காலப்பகுதியில் பொத்துவில் பொது விளையாட்டு மைதான அபிவிருத்தி வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கும்வகையில் குறித்த மைதானத்தின் அமைவிடம் தொடர்பான இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்பட வேண்டும் என விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீஸ் இதன்போது பொத்துவில் பிரதேச விளையாட்டுக் கழகங்களிடம் கேட்டுக்கொண்டார்.
பொத்துவில் பிரதேசத்தில் நான்கு சிரேஷ்ட பிரிவு கடின பந்து கிறிக்கெட் விளையாட்டுக் கழகங்களுக்கு கடின பந்து விளையாட்டு உபகரணங்களை வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை பிரதி அமைச்சர் முன்னெடுத்துள்ளதாகவும் எனவே குறித்த கடின பந்து விளையாட்டுக் கழகங்களை உருவாக்க வேண்டிய பொறுப்பு இப்பிரதேச விளையாட்டுக் கழகங்களுக்கு உள்ளதாகவும் பிரதி அமைச்சர் ஹரீஸ் தெரிவித்தார். அதேபோன்று கனிஷ்ட பிரிவு கடின பந்து கிறிக்கெட் விளையாட்டுக் கழகம் ஒன்றை உருவாக்க வேண்டிய பொறுப்பு இப்பிரதேச பாடசாலைக்கு உள்ளதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.