



க.கிஷாந்தன்-நுவரெலியா - டயகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் சிறு விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆக்ரோயா ஆறு பெருக்கெடுத்து, மரக்கறி தோட்டங்களில் வெள்ளம் பாய்ந்தோடியதால் இப்பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மழை காரணமாக டயகம தோட்டம் 4ம் பிரிவில் அமைந்துள்ள வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது. இதனால் 5 வீடுகள் வெள்ள நீரினால் நிரம்பியதுடன், மேலும் சில வீடுகளுக்கு சிறிதளவு வெள்ள நீர் உட்புகுந்துள்ளது.
வீட்டிற்கு அருகில் உள்ள ஆற்றில் நீரின் மட்டம் அதிகரித்தால் வெள்ள நீர் வீட்டினுள் புகுந்துள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.
தமது வீட்டில் ஒரு அறையேனும் இல்லாமல் வீடு முழுவதும் வெள்ள நீராக காணப்படுவதாகவும், தமது அலுமாரியில் வைத்திருந்த பொருட்கள் மற்றும் வீட்டு உபகரணங்கள் என பல பொருட்கள் வெள்ள நீரில் சேதமாகியுள்ளதாகவும் இவர்கள் குறிப்பிட்டனர்.
பாதிக்கப்பட்ட 5 குடும்பங்களை சேர்ந்த சுமார் 20ற்கும் மேற்பட்டோரை வேறு இடங்களில் தங்க வைப்பதற்கான நடவடிக்கைகளை தோட்ட நிர்வாகம் முன்னெடுத்துள்ளது.
அத்தோடு, டயகம கிழக்கு தமிழ் மகா வித்தியலாயத்தில் ஒரு பகுதியில் வெள்ள நீர் உட்புகுந்துள்ளதுடன், டயகம 3ம் பிரிவில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வளாக பகுதியிலும் வெள்ள நீர் உட்புகுந்துள்ளமை குறிப்பிடதக்கது.