ஓட்டமவடி அஹமட் இர்ஷாட்-
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கல்குடா பிரதேசத்தில் உள்ள மீராவோடை மாஞ்சோலை எல்லையில் அமைந்துள்ள சக்தி வித்தியாலய பாடசாலைக்கு சொந்தமான விளையாட்டு மைதான காணியில் முஸ்லிம்கள் அத்துமீறி குடியிருப்பதாக அது அரச காணி என்றும் அப்பிரதேசத்தினை அண்டி வாழும் தமிழ் சமூகத்தினால் குரல் எழுப்பட்டு வந்ததனை ஊடகங்கள் வாயிலாக அறியப்பட்ட விடயமாகும்.
மேலும் குறித்த விடயத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மங்களறாமய பெளத்த ஆலயத்தின் மதகுரு அம்பிட்டிய சுமனரத்ன தேரரின் ஆர்ப்பாட்டங்களும் முன்னெடுக்கப்பட்டதினால் தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கு மத்தியில் இன முறுகளினை ஏற்படுத்தும் வகையில் குறித்த காணி பிரச்சனையானது பூதாகரமாக்கப்பட்ட விடயமாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கல்குடா பிரதேசத்தில் உருவெடுத்திருந்தமையினை பரவலாக காணக்கூடியதாக இருந்தது.
இந்த நிலையில் குறித்த அரச காணியில் அத்து மீறி குடியிருந்ததாக கூறப்படும் நபர்களுக்கு எதிராக வாழைச்சேனை பொலீஸ் ஊடாக வாழைச்சேனை மாவட்ட நீதி ,மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு அதற்கான தீர்ப்பானது காணி உரிமையாளர்கள் அவர்களுடைய இடத்தில் வாழ்வதற்கான அனுமதி இருக்கும் அதே நேரத்தில் குடி இருப்பவர்களுக்கு எதுவித குந்தகமும் விளைவிக்க கூடாது என்றும், காணிக்கான உரிமை கோரிய சக்திவித்தியாலய அதிபர் மற்றும் நிருவாகத்திற்கு சிவில் வழக்குகளை தொடுக்குமாறும் அல்லது மேன்முறையீடு செய்வதற்கான தீர்ப்பானது வழங்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கினை நீதி மன்றத்தில் வழக்காடிய சட்டத்தரணி நிசார் குறித்த நீதிமன்ற தீர்ப்பு பற்றி வழங்கிய கருத்துகள் அடங்கிய காணொளி எமது இணைய நாளிதழ் வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செயப்பட்டுள்ளது.

