சுலைமான் றாபி-
2017 ம் ஆண்டுக்கான தேசிய மீலாத் தின ஆரம்பப் பிரிவு ஆங்கிலப் பேச்சுப் போட்டியில் நிந்தவூர் அஸ் சபா பாடசாலை மாணவன் யு.எம். நித்தீஸ் அஹமட் தேசிய ரீதியில் முதலாம் இடத்தினை பெற்று சாதனை படைத்துள்ளார்.
இவர் கடந்த மாதம் கிண்ணியா அல் அக்சா வித்தியாலயத்தில் நடைபெற்ற மாகாண மட்ட ரீதியிலும் குறிப்பிட்ட போட்டியில் முதலாம் இடத்தினைப் பெற்றதோடு, இம்மாதம் 4ம் திகதி கொழும்பு பாத்திமா முஸ்லீம் மகளிர் வித்தியாலயத்தில் இடம்பெற்ற தேசிய மட்டப் போட்டியிலும் முதலாம் இடத்தினைப் பெற்று கல்முனை கல்வி வலயத்திற்கும், தனது சொந்த ஊரான நிந்தவூரிற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
இதேவேளை இந்தப் பாடசாலை வரலாற்றில் முதன் முதலாக தேசிய ரீதியில் கௌரவத்தினைப் பெற்றுக்கொடுத்த மாணவன் யு.எம். நித்தீஸ் அஹமட் இன்றைய தினம் (13) பாடசாலை அதிபர் எஸ். காதர் தலைமையில் நடைபெற்ற காலைக் கூட்டத்தில் பாராட்டி கௌரவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கதாகும்.