கரீம் எ.மிஸ்காத்-
வடக்கு முஸ்லிம்கள் புலிகளால் பலவந்தமாக வெளியேற்றப்பட்டு 27 வருடங்கள் கடந்தும் வடக்கு முஸ்லிம்களின் தாயகத்துக்கான மீள்குடியேற்றம் மந்தகதியிலேயே உள்ளது. என வடக்கு முஸ்லிம் கூட்டமைப்பின் தலைவர் யாழவன் நஸீர் நேற்று தில்லையடி, றத்மல்யாயவில் இடம்பெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்:
மத்திய அரசோ, வடக்கு மாகாண அரசோ இம்மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் போதிய கரிசனை காட்டுவதாக தெரியவில்லை.
மீள்குடியேற்ற அமைச்சினால் வழங்கப்பட்ட விண்ணப்பங்களில், சில நிபந்தனைகள் யாழ் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை இல்லாமல் செய்கின்றது.
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மீள்குடியேற்ற செயலனியாவது இவ்வாறான பிர்சினைகளை தீர்த்து வைக்கும் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது.
கடந்த மாதம் 30ம் திகதி
வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கத்திற்கும், எமக்கும் இடையில் ஒரு சிநேகபூர்வ சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது வடபுல முஸ்லிம்கள் புலிகளால் வெளியேற்றப்பட்டது ஒரு துன்பியல் நிகழ்வு எனவும் யாழ்முஸ்லிம்கள் மீளக்குடியேர தன்னாலான முயற்சியில் உதவுவேன் என அவர்குறிப்பிட்டதாக, இவ் அமைப்பின் தலைவர் தெரிவித்தார்.
எனினும் வடக்கு மாகாண சபை ஒரு சமூகத்திற்கு உரிய ஒன்றல்ல, வடக்கில் வழும் அனைத்து சமுதாயத்துக்கும் உரியதாகும்.
வடக்கு மாகாண சபையானது
முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கு காத்திரமான எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கு ஒரு துண்டு காணியை வழங்குவதற்கு இம்மாகாண சபைக்கு விருப்பம் இல்லை என்பதையே நாம் உணர்கின்றோம்.
இம்மாத இறுதிக்குள் வடக்கு மாகாண முதலமைச்சரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்துள்ளோம், இதற்கு உதவுவதாக சிவாஜிலிங்கம் அவர்கள் எம்மிடம் கூறியுள்ளார்.
எது எவ்வாறெனினும் எமது சுமூகமான பேச்சுவார்த்தை போக்குக்கு, சுமூகமான தீர்வு கிடைக்காவிடின்
20,000 மக்களை ஒன்று திரட்டி வடக்கு மாகாண சபைக்கு எதிராக போராடவும் நாம் தயங்கமாட்டோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில்
மெளலவி சல்பிக்கான், அஸ்வர்கான், ஜெஸ்லி, ஜபருல்லா ஆகியோரும் கலந்து கொண்டனர்.