ஐ. ஏ. காதிர் கான்-
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் பெண்களுக்கு 25 சத வீத பிரதி நிதித்துவத்தை உறுதிப்படுத்தியமையை அடையாளப்படுத்தும் நோக்கில், கொழும்பில் நேற்று (14) பாரிய நடைபவனி ஒன்று இடம்பெற்றது. கொழும்பு - விகாரமகா தேவிப் பூங்காவிலிருந்து மாலை மூன்று மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட இந் நடைபவனி, மாலை நான்கு மணியளவில் சுதந்திரசதுக்க வளாகத்தைச் சென்றடைந்தது.
மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைஸர் முஸ்தபா இந் நடைபவனியை வழி நடத்திச் சென்றார். இந் நடைபவனியில், பெருந்திரளான பெண்கள் கலந்துகொண்டனர். இறுதியில், இது தொடர்பிலான விசேட வைபவம் ஒன்று, கொழும்பு - பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில், இரவு 7 மணியளவில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில், அமைச்சர் பைஸர் முஸ்தபா உள்ளிட்ட அமைச்சர்கள், இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
"உள்ளூராட்சி மன்றங்களில், பெண்களுக்கு 25 சதவீத பிரதிநிதித்துவம் கட்டாயம் வழங்கப்படல் வேண்டும்" என்று, சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற்ற வைபவத்தின் இறுதியில் கலந்து கொண்டு உரையாற்றும்போது, அமைச்சர் பைஸர் முஸ்தபா வலியுறுத்திக் கூறினார்.



