பைஷல் இஸ்மாயில் -
ஏறாவூர் பொதுச் சந்தை வியாபாரிகள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளை அறிந்துகொள்வதற்காக வேண்டி நகர சபையின் செயலாளரும் விசேட ஆணையாளருமாகிய பிர்னாஸ் இஸ்மாயில் தலைமையிலான ஒரு குழுவினர் நேரடி கள விஜயத்தினை மேற்கொண்டு அவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்துகொண்டனர்.
மேற்படி கள விஜயம் இன்று காலை (29) இடம்பெற்றபோது சந்தை வியாபாரிகள் கடந்த சில மாதங்களாக எதிர்நோக்கி வருகின்ற பிரச்சினைகளை முன்வைத்தனர்.
சந்தையில் மின்குமிழ் பொறுத்துதல், நீர் தேங்கியுள்ள இடங்களுக்கு மண், கல் போன்றவற்றை இடுதல், நீர் தேங்கி நிற்கின்ற இடங்களை நீர் வடிந்தோடுவதற்கான சகல ஏற்பாடுகளையும் செய்தல், சந்தையைச் சுற்றியதான கம்பி வேலி அமைத்துத்தல், மலசல கூடத்தை சுத்தப்படுத்தி தருவதோடு அதனை பராமரித்து வருவதற்கு நிரந்தரமான ஒரு ஊழியரை நியமித்தல் போன்ற பிரச்சினைகள் அவர்களினால் முன்வைக்கப்பட்டது.
அவர்களினால் முன்வைக்கப்பட்ட 5 கோரிக்கைகளில் 3 கோரிக்கைகள் உடனடியாக நிவர்த்தி செய்து கொடுக்கும்படி சம்பந்தப்பட்ட நகர சபை உத்தியோகர்களுக்கு நகர சபையின் செயலாளரும் விசேட ஆணையாளருமாகிய பிர்னாஸ் இஸ்மாயிலினால் பணிப்புரை வழங்கி வைக்கப்பட்டது.
அதற்கமைவாக சந்தையில் மின்குமிழ் பொறுத்தல், நீர் தேங்கியுள்ள இடங்களுக்கு மண், கல் இடுதல், நீர் தேங்கி நிற்கின்ற நீரை வடிந்தோடுவதற்கான ஏற்பாடுகள் உடனடியாக அன்றைய தினம் நிவர்த்தி செய்துகொடுக்கப்பட்டது.
சந்தையைச் சுற்றியதான கம்பி வேலி அமைப்பதற்கான வேலையினை 3 தினங்களுக்குள் செய்து தருவதாகவும், மலசல கூடத்தை சுத்தப்படுத்துதல் மற்றும் அதனை பராமரிப்பதற்கான ஊழியரை ஒரு வாரகாலத்துக்குள் நிவர்த்தி செய்து தருவதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.



