![]() |
FilePIC |
வட யேமனிலுள்ள, சனநெருக்கடி மிக்க சந்தையொன்றில், சவூதி அரேபியா தலைமையிலான கூட்டணி, நேற்று முன்தினம் நடாத்திய விமானத் தாக்குதலில் 29 பேர் கொல்லப்பட்டதாக ஹூதி சுகாதார அதிகாரிகள் தெரித்துள்ளனர்.
இந்நிலையில், சாடா பகுதியில் நடாத்தப்பட்ட குறித்த தாக்குதலுக்கு உரிமை கோராமல், அறிக்கைகளை ஆராய்ந்து வருவதாக, பொதுமக்கள் உயிரிழப்புகள் தொடர்பாக தொடர்ச்சியான விமர்சனங்களை எதிர்கொண்டுவரும் கூட்டணி தெரிவித்துள்ளது.
கொல்லப்பட்டவர்களில் பலரின் முகங்கள் அடையாளம் காண முடியாதளவுக்கு சிதைவடைந்துள்ள நிலையில், வெள்ளை சடலப் பைகளில் இடப்பட்டு, குடும்பங்கள் அடையாளங் காணுவதற்காக வைத்தியசாலை பிணவறையொன்றில் வைக்கப்பட்டுள்ளன.
இத்தாக்குதலில் 29 பேர் கொல்லப்பட்டதுடன் 17 பேர் காயமடைந்துள்ளதாக சுகாதார சேவை தெரிவிக்கின்ற நிலையில், ஹூதிகளால் நடாத்தப்படும் சபா செய்தி முகவகரம் 21 பேர் இறந்ததாகவும் அனைவரும் பொதுமக்களெனத் தெரிவித்துள்ளது. இது தவிர, சஹர் மாவட்டத்தில் நடாத்தப்பட்ட இத்தாக்குதலை, சவூதி தலைமையிலான கூட்டணியே நடத்தியதாக குற்றஞ்சாட்டியுள்ளது.
ஹூதிகளால் கட்டுப்படுத்தப்படும் பிராந்தியத்தின் மீது வான் முடக்கத்தை கூட்டணி அமுல்படுத்தியுள்ள நிலையில், சவூதி எல்லையுடன் கூடிய யேமனிய எல்லையில் கூட்டணி மாத்திரமே போர் விமானங்களை இயக்குகின்றது.
சிறுவர்களைக் கொன்றதற்காக, கூட்டணியை ஐக்கிய நாடுகள் கடந்த மாதம் கறுப்புப் பட்டியலில் சேர்த்தமை குறிப்பிடத்தக்கது.
வெட்கத்துக்கான வருடாந்த பட்டியலில், குறிப்பிட்ட காலத்துக்கு கூட்டணி சேர்க்கப்பட்டிருந்தபோதும் ஐக்கிய நாடுகளின் திட்டங்களுக்கான தனது நிதியளிப்பை நிறுத்தப்போவதாக சவூதி அரேபியா அச்சுறுத்தியமையையடுத்து, குறித்த பட்டியலிலிருந்து நீக்கப்பட்டது.