ஏறாவூர் ஏஎம் றிகாஸ்-
மட்டக்களப்பு- தொப்பிகல - பிரதேசத்திலுள்ள அரசாங்க காட்டுப்பகுதியில் சட்டவிரோதமாக வெட்டி விற்பனைக்காக லொறியொன்றில் ஏற்றிச்செல்லப்பட்ட பெரும் எண்ணிக்கையிலான தேக்குமரக்குற்றிகளை கரடியனாறு பொலிஸார் 27.11.2017 அதிகாலை 1.00 மணியளவில் கைப்பற்றியுள்ளனர்.
இந்த லொறியின் சாரதியும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இந்த லொறியில் 16 அடி நீளமுள்ள 33 தேக்கு மரக்குற்றிகள் காணப்பட்டதாக கரடியனாறு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டிஎம்ஏ. சமரகோன் தெரிவித்தார்.
இந்த லொறியின் இலக்கத்தை தேவையான நேரத்தில் மறைத்துக்கொள்ளத்தக்கதாக அசவு இட்டு பொருத்தப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் பொலிஸாருக்கு வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
பொலிஸ் புலனாய்வுப்பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலொன்றையடுத்து நரகமுல்ல- புளுட்டுமான்ஓடை வீதி காட்டுப்பகுதியில் பதுங்கியிருந்த பொலிஸார் அவ்வழியே மரக்குற்றிகளை ஏற்றிவந்துகொண்டிருந்த லொறியை கைப்பற்றியுள்ளனர்.
லொறியின் சாரதி ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற பதில் நீதிபதி எஸ். தியாகேஸ்வரன் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டதையடுத்து அவர் அடுத்த மாதம் 8 ஆந்திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த மரக்குற்றிகள் ஓட்டமாவடியிலுள்ள மர ஆலையொன்றி;ற்கு ஏற்றிச்செல்லப்பட்டிருக்கலாமென பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
அண்மைக்காலத்தில் கரடியனாறு பொலிஸாரினால் கைப்பற்றப்பட்ட பெரும் எண்ணிக்கையிலான மரக்குற்றிகள் இவையாகுமென தெரிவிக்கப்படுகிறது.