க.கிஷாந்தன்-
நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நானுஓயா எபோஸ்போட் தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தையும், எபோஸ்போட் தமிழ் வித்தியாலயத்தின் களஞ்சியசாலையும், பிரதான காரியாலயமும், சிற்றூண்டிசாலையும், அருகில் உள்ள சிறுவர் நிலையத்தையும் உள்ளே நுழைந்த இனந்தெரியாதவர்கள் உடைத்துள்ளனர்.
எனினும் எந்தவிதமான பொருட்களையும் களவாடிவில்லை எனவும், சிறுவர் நிலையத்தில் உள்ள எரிவாயு சிலிண்டர்களை மட்டும் களவாடிச் சென்றுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளின் பின் தெரியவந்துள்ளது.
14.09.2017 அன்று இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளை மேற்கொள்ளும் நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.
அத்தோடு நானுஓயா பொலிஸாருக்கு புகார் செய்யப்பட்டதையடுத்து 15.09.2017 அன்று நுவரெலியா பொலிஸார் மோப்பநாய்களுடன் ஆலய கட்டிட வளாகத்திற்கும், பாடசாலை வளாகத்திற்கும் சென்று தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர்.
அத்தோடு சம்பவம் தொடர்பில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணகைளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.