எம்.ரீ. ஹைதர் அலி-
மட்டு மாவட்டத்தில் மீன்பிடி துறையினை அபிவிருத்தி செய்யுமாறு மீன்பிடி, நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சரிடம் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் கோரிக்கை
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடற்றொழிலியல் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பு என்பவற்றினை மேம்படுத்தும் நோக்கில் கடற்றொழில் நீரியல் வளங்கள் அமைச்சு இலங்கை தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையின் ஏற்பாட்டில் பல்வேறு செயற்றிட்டங்கள் அண்மையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இலங்கை தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் உபாலி மொஹோட்டி, இலங்கை மற்றும் மாலைதீவிற்கான உணவு மற்றும் விவசாய பிரதிநிதி செல்வி நினா ப்ரான்ஸ்ரப் ஆகியோரின் ஒருங்கிணைந்த வழிகாட்டுதல் மற்றும் பங்குபற்றுதலுடன் நடைபெற்ற இந்நிகழ்வுகளில் பிரதம அதிதியாக மீன்பிடி, நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சரும் மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான கௌரவ மகிந்த அமரவீர அவர்கள் கலந்து கொண்டார்.
மேலும், கௌரவ அதிதிகளாக கிழக்கு மாகான முதலமைச்சர் நசீர் அஹமட், மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், கிழக்கு மாகாண மீன்பிடித்துறை அமைச்சர் கௌரவ கிருஸ்ணபிள்ளை துரைராஜசிங்கம், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் உள்ளிட்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இறால் வளர்ப்பு மற்றும் பல்லின கடல்வாழ் மீன் வளர்ப்புத் திட்டம், நீரியல் உயிர்வளங்கள் ஆய்வுகூடம், மீனவர் தங்குமிடம் ஆகிய பல்வேறு திட்டங்கள் இதன்போது திறந்து வைக்கப்பட்டதோடு களப்புடன் அமைந்த கிராம அபிவிருத்தி வேலைத்திட்டத்தின்கீழ் நவீனமயப்படுத்தவுள்ள சல்லித்தீவு கொங்ரீட் வீதிக்கான வேலைத்திட்டமும் இதன்போது ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மேலும் மட்டக்களப்பு மாவட்டமானது ஏறத்தாள 75 சதவீதமான நீரியல் பிரதேசத்தினையும் அதிகளவான நீரியல் வளங்களையும் கொண்டுள்ள போதிலும் மீன்பிடி அபிவிருத்திகள் தொடர்பான முறையான செயற்றிட்டங்கள் இன்மை காரணமாக பிற மாவட்டங்களிலிருந்து மீன்கள் மற்றும் கருவாடு போன்றவற்றினை மட்டக்கப்பு பிரதேசத்திற்கு இறக்குமதி செய்கின்ற ஒரு துர்ப்பாக்கிய நிலை காணப்படுவதனை கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்கள் மீன்பிடி, நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் மகிந்த அமரவீர அவர்களிடம் சுட்டிக்காட்டினார்.
அதற்கமைவாக எதிர்காலத்தில் மட்டக்களப்பு மாவட்ட அரசியல் பிரதிநிதிகளுடன் இணைந்து மட்டக்களப்பு மாவட்ட மீன்பிடித் துறையினை அபிவிருத்தி செய்வதற்கான ஆக்கபூர்வமான செயற்றிட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக மீன்பிடி, நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் வாக்குறுதியளித்தார்.