எம்.வை.அமீர்-
கிழக்குமாகாணத்தில் சுற்றுலாத்துறையை ஊக்குவிக்குமுகமாக, துறை சார்ந்தவர்களுடனான கலந்துரையாடல்களை கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை அமைச்சும் ஆசியா பவுன்டேஷனும் இணைந்து செய்துவருகின்றது. ஏற்கனவே திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் குறித்த கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ள நிலையில், அம்பாறை மாவட்டத்துக்கான கலந்துரையாடல் நிந்தவூர் தோம்புக்கண்டம் ஹோட்டேலில் 2017-07-10 ஆம் திகதி இடம்பெற்றது.
சப்ரஹமுவ பல்கலைக்கழகத்தின் பதிவாளர் எம்.எப்f.இபதுள் கரீம் தலைமையில், ஆசியா பௌண்டேசனின் நிகழ்ச்சித்திட்ட ஆலோசகர் எம்.ஐ.எம்.வலீதின் நெறியாள்கையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், வளவாளர்களாக சப்ரஹமுவ பல்கலைக்கழகத்தின் பீடாதிபதி றாஜ் ரத்னாயக்க மற்றும் சட்டத்தரணி மர்சூம் மௌலானா ஆகியோரும் கலந்துகொண்டிருந்த அதேவேளை, ஆசியா பௌண்டேசனின் நிகழ்ச்சித்திட்ட இணைப்பாளர் ரி.தங்கேசும் பங்குகொண்டிருந்தார்.
அம்பாறை மாவட்டத்திலிருந்து சுற்றுலாத்துறை சார்ந்தோரும் ஏனைய துறைகளுடன் சம்மந்தப்பட்டோருமாக பலரும் பங்குகொண்டிருந்தனர். நிகழ்வின்போது சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பது தொடர்பாக குழுச்செயற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு கருத்துப் பரிமாறல்கள் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.