பாறுக் ஷிஹான்-
புளியங்குளம் பகுதியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு பல இலட்சம் மதிப்பு உள்ள மரக்குத்திகளை சிற்றூர்தி மூலமாக கடத்திய நபர்களை கைது செய்ய கொடிகாமம் பொலிஸ் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது.
இன்று (7) அதிகாலை 4.30 மணியளவில் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் மகேஸ் வெலிபன்னவின் உடனடி முறியடிப்பு அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடிப்படையாக வைத்து மரக்கடத்தலில் ஈடுபட்ட வாகனம் தொடர்பாக தேடுதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இதன் போது இயக்கச்சி பகுதியில் குறித்த வாகனம் இனங்காணப்பட்டு உடனடி முறியடிப்பு அதிகாரிகள் சகிதம் கிளிநொச்சி பொலிஸாரினால் பின்தொடரப்பட்டுள்ளது.
இதனை அவதானித்த சிற்றூர்தியில் இருந்த மரக்கடத்தல் காரர்கள் வாகனத்தை மிக விரைவாக செலுத்தி சென்றுள்ளனர்.
இதன் போது கொடிகாமம் பொலிஸ் எல்லைக்கு குறித்த சிற்றூர்தி சென்றதை அடுத்து கிளிநொச்சி பொலிஸார் கொடிகாமம் பொலிஸ் நிலைய உதவியை பெற்று இரு பொலிஸ் நிலையமும் இணைந்து எழுது மட்டுவாழ் பகுதியில் இருந்து தடைமுறியடிப்பு ஒழுங்குகளை மேற்கொண்டிருந்தனர்.
இந்த தடையையும் உடைத்து மீறி சென்ற குறித்த சிற்றூர்தி இறுதியாக கொடிகாமம் புத்தூர் சந்தியில் வைத்து மடக்கி பிடிக்கப்பட்டது.
இதன் போது சிற்றூர்தியில் முதிரை மரக் குத்திகளை நூதனமாக கடத்திய மூவர் அவ்விடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளனர்.
அடுத்து சிற்றூர்தியை மீட்ட பொலிஸார் அதிலிருந்து பல இலட்சம் பெறுமதியான முதிரை மரக்குற்றிகளை மீட்டனர்.
இந்த மரக்கடத்தலில் தப்பி சென்ற இருவரையும் அடையாளம் கண்டுள்ள கொடிகாமம் பொலிஸார் அவர்களை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இதே வேளை மரங்களுடன் கைப்பற்றப்பட்ட வாகனம் இன்றைய தினம் சாவகச்சேரி நீதிமன்றத்தில் பாரப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.