குவைத் அமீரின் தீவிர முயற்சிகளுக்கு மத்தியில் கட்டார் தரப்பிலிருந்து சாதகமான சமிக்ஞைகள் இல்லாத நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கை பொருளாதாரத் தடையாகவே இருக்கும் என எச்சரித்துள்ளது ஐக்கிய அரபு அமீரகம். இஹ்வான்கள் மற்றும் ஈரானுக்கான ஆதரவு நிலைப்பாட்டிலிருந்து கட்டார் மாறிக்கொள்ளாத வரை கட்டாருடனான உறவில் எவ்வித முன்னேற்றமும் வரப் போவதில்லையென சுட்டிக்காட்டியுள்ள அமீரகத்தின் வெளியுறவுத்துறை அமைச்சர் அன்வர் கர்கேஷ், அடுத்த கட்ட நடவடிக்கையாக பொருளாதாரத் தடை அமையும் எனவும் கட்டார் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
2014ம் ஆண்டு, இக்குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கட்டார் வளைகுடா நாடுகளுக்கான கூட்டுறவு அமைப்பிலிருந்து நீக்கப்பட்டிருந்தது. எனினும், பேச்சுவார்த்தைகளின் மூலம் வாக்குறுதிகளின் அடிப்படையில் மீண்டும் இணைத்துக் கொள்ளப்பட்டிருந்த நிலையில் மீண்டும் அண்மையில் ட்ரம்ப் மத்திய கிழக்கு விஜயம் மேற்கொண்டதைத் தொடர்ந்து கடந்த திங்கட்கிழமை முதல் அரபு நாடுகளுக்குள் முறுகல் நிலை தொடர்கிறது. கட்டாரின் ஈரான் ஆதரவு நிலைப்பாடு பிராந்தியத்தின் பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தலாக இருப்பதாக பஹ்ரைன் சுட்டிக்காட்டியிருக்கும் அதேவேளை தம் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தையும் கட்டார் நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.