வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற படுகொலைகள் தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ கைது செய்யப்படவுள்ளதாக ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. 2012ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9ஆம் திகதி இடம்பெற்ற கொலை மற்றும் 2013ஆம் ஒகஸ்ட் மாதம் இடம்பெற்ற ரத்துபஸ்வெல கொலைகளுடன் கோத்தபாய ராஜபக்ஷ இவ்வாறு கைது செய்யப்படவுள்ளார்.
ரத்துபஸ்வெல கொலை சம்பவம் தொடர்பில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிரிகேடியர் தேஷபிரிய குணவர்தனவிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. அதற்கமைவாக இலங்கை இராணுவத்தின் பிரிகேடியர் ஷாந்த திஸாநாயக்கவை கடந்த 29ஆம் குற்றப்புலனாய்வு பிரிவிற்கு அழைத்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன்போது பெற்றுக்கொள்ளளப்பட்ட தகவலின் அடிப்படையில் கோத்தபாய ராஜபக்ஷ கைது செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிரிகேடியர் தேஷபிரிய குணவர்தனவின் உடனடி பிரதானியாக பிரிகேடியர் ஷாந்த திஸாநாயக்க செயற்பட்டுள்ள நிலையில், அவருக்கு இன்னொரு முக்கியஸ்தரிடமிருந்து உத்தரவு கிடைத்துள்ளதென தெரியவந்துள்ளது. வெலிக்கடை சிறைச்சாலை கொலை தொடர்பில் முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் அநுர சேனாநாயக்க, ஊடாக பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் பொலிஸ் பரிசோதகர் நியோமால் ரங்கஜீவ வழங்கிய “துண்டு” ஒன்று கிடைத்துள்ளதாக குற்ற விசாரணை திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதற்காக நேரடியாக ஆலோசனை வழங்கியது யார் என்பது தொடர்பில் சாட்சி கிடைத்துள்ளதாக குற்ற விசாரணை திணைக்களம் கண்டுபிடித்துள்ளது. எப்படியிருப்பினும் எதிர்வரும் நாட்களில் கோத்தபாய ராஜபக்ஷ கைது செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவ்வாறு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ கைது செய்யப்படுவாராயின் கொழும்பு அரசியல் மட்டத்தில் பல சர்ச்சைக்குரிய சம்பவங்கள் இடம்பெறலாம் என ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.
வெலிக்கடை கொலை சம்பவத்துடன் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ நேரடியாக தொடர்புபட்டுள்ளதாகவும், அது தொடர்பான உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும் குற்ற புலனாய்வு பிரிவினர் நீதிமன்றில் அறிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.டி.சி