ஞானசார தேரர் சட்டத்தை கையில் எடுப்பதாக சவால் விடுவதை அரசாங்கம் தொடர்ந்தும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்குமானால் முஸ்லிம் சமூகமும் சட்டத்தை கையில் எடுக்க நேரிடும் என கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ் எம் மரிக்கார் குறிப்பிட்டார்.
தாக்குதலுக்கு உள்ளான வெள்ளம்பிட்டிய கொஹிலவத்த பள்ளிவாயலுக்கு சற்றுமுன் விஜயம் செய்த பாராளுமன்ற உறுப்பினர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்;
கடந்த காலங்களில் சற்று அடங்கியிருந்த ஞானசார தேரர் உள்ளிட்ட குழுவினர் மீண்டும் தங்கள் அட்டகாசத்தை துவங்கியுள்ளனர். எமது இறை நம்பிக்கைக்கு சவால்விடும் வண்ணமும் எமது இறைவனை அவமதிக்கும் வண்ணமும் அவர் கருத்து வெளியிட்டுள்ளனர். இந்த விடயம் எம் சமூகத்தில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று முன்தினம் பொலன்னறுவை சென்ற ஞானசார தேரர் குழு பொலிஸாரும் வனபரிபாலன திணைக்கள அதிகாரிகளும் செய்ய வேண்டிய வேலையை அவர்கள் அங்கு செய்துள்ளனர். தாங்கள் உத்தியோகபூர்வமில்லாத பொலிஸாராக செயற்படபோவாதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் நாம் பொலிஸ் மா அதிபர் இடத்தில் நாம் முறையிட்டுள்ளோம். அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீண்டும் மீண்டும் வலியுருத்தியுள்ளோம். இதற்கான ஒரு நல்ல ஒரு முடிவை அவர் எமக்கு தரவேண்டும் என அவரிடம் வேண்டியுள்ளோம்.
ஞானசார தேரர் உள்ளிட்ட குழுக்கள் தொடர்ந்து நீதித்துறையை மீறி சட்டத்தை கையில் எடுக்க முயற்சிப்பாராக இருந்தால் அதனை நாட்டின் சட்டமும் நீதியும் தொடர்ந்து பார்த்துக்கொண்டு இருக்குமாயின் முஸ்லிம் சமூகமும் சட்டத்தை கையில் எடுத்தாவது அவரின் கொட்டத்தை அடக்குவதை தவிர வேறு வழியில்லை எனவும் எமது பொருமைக்கும் ஒரு எல்லை உண்டு எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
கடந்த ஆட்சியில் இடம்பெற்ற முஸ்லிம் விரோத செயற்பாடுகள் காரணமாகவே நாட்டில் ஆட்சி மாற்றத்துக்கு முஸ்லிம்கள் பாரிய பங்களிப்பு செய்தனர். எனவே இந்த விடயத்தை அரசாங்கம் கருத்தில் கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

