மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடாவில் நிர்மாணிக்கப்பட்டு வரும் மதுபான உற்பத்தி தொழிற்சாலையை நிறுத்துமாறு கோரி மாபெரும் கண்டன மக்கள் எழுச்சி போராட்டமொன்றினை அமைதியான முறையில் கல்குடா ஜம்இய்யத்துல் உலமா சபையின் வழிகாட்டலில் நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 19.05.2017 ம் திகதி வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையின் பின்னர் இடம்பெறவுள்ள இந்த மக்கள் எழுச்சி போராட்டத்தில் அனைவரையும் கலந்துகொள்ளும் படி வேண்டுகோள் விடுப்பதோடு, அன்றைய தினம் கல்குடாவிலுள்ள அனைத்து ஜும்ஆப் பள்ளிவாயல்களிலும் ஜும்ஆ உரையினை 1 மணிக்கு முன்னர் நிறைவு செய்துகொள்ளுமாறும் பள்ளிவாயல்கள் நிருவாகத்திடம் கல்குடா ஜம்இய்யத்துல் உலமா சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.
குறித்த மக்கள் எழுச்சி போராட்டத்தில் இன, மத, பேதமின்றி அரசியல் தலைவர்கள், மதத்தலைவர்கள், அமைப்புக்கள் எனப்பலரும் கலந்துகொள்ளவுள்ளனர். ஜும்ஆ தொழுகையின் பின்னர் ஓட்டமாவடி பொதுச்சந்தை சுற்றுவட்ட சந்தியிலிருந்து செல்லவுள்ள இந்த மக்கள் எழுச்சி போராட்ட அமைதிப்பேரணி வாழைச்சேனை பொலிஸ் நிலையம் வரை செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இக் கண்டனப்பேரணியின் இறுதியில் கல்குடாவில் பாரியளவில் நிர்மாணிக்கப்படும் மதுபான உற்பத்தி தொழிற்சாலையை நிறுத்துமாறு கோரி ஜனாதிபதிக்கான மகஜர் வாழைச்சேனை பிரதே செயலாளரிடம் கையளிக்கப்படவுள்ளது.