இலங்கை வந்துள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடியை, இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று சந்தித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இச் சந்திப்பு மோடியின் நிகழ்ச்சி நிரலில் இடம்பெற்றிருக்காத போதும் நேற்றிரவு இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் கோரிக்கைக்கு அமையவே இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 2015ம் ஆண்டில் இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்ச படுதோல்வி அடைந்தார். தனது தோல்விக்கு இந்திய அரசே காரணம் என பகிரங்கமாக அவர் குற்றஞ்சாட்டியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
ஆனால், அண்மையில் அளித்தப் பேட்டி ஒன்றில் பிரதமர் மோடியை வெகுவாக பாராட்டிப் பேசியதோடு, தன்னை மோடி மிகவும் கவர்ந்துவிட்டதாகவும் கூறியிருந்தார். மோடியை மகிந்த ராஜபக்ச பாராட்டிய சில நாட்களிலேயே மோடி – மகிந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
