சட்டம், விதிகள் என்ற சுற்று நிருபங்களை சுற்றி வைத்து விட்டு நிவாரண பணிகளை செய்யுங்கள். சுற்று நிருபங்களில் இருக்கின்ற விதிகளை காட்டி தாமதம் செய்யாமல், நிவாரண பணிகளில் இறங்குங்கள். இதற்கு அனைத்து அமைச்சர்களும், எம்பீக்களும் துணை இருக்கின்றோம். இதுவே இன்று எங்கள் அரசாங்க கொள்கை என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசனும், பிரதி தலைவர் பழனி திகாம்பரமும் நேற்று களுத்துறை மாவட்ட வெள்ள சேதங்கள் மற்றும் நிவாரண நடவடிக்கைகளை ஸ்தலத்துக்கு சென்று பார்வையிட்டனர். மதுராவெளை பகுதியில் வெள்ளத்தில் மரணம் அடைந்தவர்களின் இறுதிக்கிரியைகளிலும் கலந்து கொண்டனர்.
அப்பிரதேசத்தில் நிவாரண நடவடிக்கைகள் தொடர்பாக அதிகாரிகளுக்கு உரிய பணிப்புரைகளையும்,ஆலோசனைகளையும் அமைச்சர்கள் மனோ கணேசனும், பழனி திகாம்பரமும் வழங்கினர். அவ்வேளையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் மனோ கணேசன் மேலும் கூறியதாவது,
தேவையான அளவு நிதி இருக்கின்றது. இந்திய அரசு முதல் பல்வேறு நட்புறவு நாடுகள் எங்களுக்கு உதவுகின்றன. சுத்தமான நீர், உலர் உணவு அல்லது சமைத்த உணவு, அவசியமான இடங்களில் படகுகள், கூடாரங்கள், மருந்து வகைகள், உள்ளாடைகள் உட்பட ஆடைகள் ஆகிய அனைத்தும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. இவற்றை விநியோகிக்க இராணுவத்தினர், விமானப்படையினர், கடற்படையினர் இருக்கின்றனர். எனவே சுற்று நிருபங்களில் இருக்கின்ற விதிகளை காட்டி தாமதம் செய்யாமல், அவற்றை சுற்றி வைத்துவிட்டு நிவாரண பணிகளில் இறங்குங்கள். இதற்கு அனைத்து அமைச்சர்களும், எம்பீக்களும் துணை இருக்கின்றோம்