எஸ்.அஷ்ரப்கான்-
சாய்ந்தமருது பிளைங் ஹோர்ஸ் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற கண்காட்சி சினேகபூர்வ உதைப்பந்தாட்ட போட்டியில் மருதமுனை எவரெடி விளையாட்டுக் கழகம் 1 - 0 என்ற கோல் கணக்கில் சாய்ந்தமருது பிளைங் ஹோர்ஸ் விளையாட்டுக் கழகத்தினை வெற்றி கொண்டது.
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அப்துர் ரஸாக் ( ஜவாத்) அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் 50 ஆயிரம் ௹பாய் பெறுமதியான விளையாட்டு உபகரணங்கள் வழங்கலும், கண்காட்சி சினேகபூர்வ உதைப்பந்தாட்ட போட்டியும் நேற்று (11) மாலை 5 மணிக்கு சாய்ந்தமருது பெளஸி ஞாபகார்த்த விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்றது.
கழகத்தின் ஆயுட்கால செயலாளர் எஸ். முஹம்மட் கானின் நெறிப்படுத்தலில் இடம்பெற்ற இவ்வுதைப்பந்தாட்ட போட்டி நீகழ்விற்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அப்துர் ரஸாக் (ஜவாத்), கௌரவ அதிதியாக முன்னாள் கல்முனை மாநகர சபை பிரதி முதல்வர் அப்துல் மஜீட் ஆகியோர் கலந்து சிறப்பித்துடன் வெற்றி பெற்ற கழகத்திற்கான வெற்றிக் கேடயத்தையும், பிளைங் ஹோர்ஸ் விளையாட்டுக் கழகத்திற்கான விளையாட்டு உபகரணங்களையும் அதிதிகள் வழங்கி வைத்தனர்.
இங்கு பிளைங் ஹோர்ஸ் விளையாட்டுக் கழகத்தினரால் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அப்துர் ரஸாக் (ஜவாத்) பொன்னாடை போர்த்தி வாழ்த்துப்பா வழங்கி கெளரவிக்கப்பட்டார்.