எம்.ரீ.ஹைதர் அலி-
எமது பிரதேசங்களில் இடம்பெறக்கூடிய அனைத்து விதமான அபிவிருத்தி பணிகளையும் மிகவும் திட்டமிட்ட முறையிலும் நகரசபையினுடைய உத்தியோகத்தர்கள் மற்றும் என்னுடைய நேரடி மேற்பார்வையின் கீழும் மேற்கொண்டு வருகின்றோம். கடந்தகால மழை காலங்களின் போது தக்வா நகர் மற்றும் மீன் பிடி இலாகா வீதி என்பன வெள்ளத்தினால் முற்றாக பாதிக்கப்படுகின்ற ஓர் நிலைமை காணப்பட்டது என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக்கின் முயற்சியினால் கிழக்கு மாகாண சபை நிதி ஒதுக்கீட்டின் கீழ் காத்தான்குடி பிரதேசத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 4 நூலகங்கள், வீதி மற்றும் வடிகான்களை மக்கள் பாவனைக்காக உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வுகள் 2017.03.05ஆந்திகதி-ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்...
காத்தான்குடி சின்னத்தோனாவினுடைய புனரமைப்பு பணிகளுக்காக சுமார் 1 கோடி 10 இலட்சம் ரூபா நிதிகளை ஒதுக்கீடு செய்து மழைநீர் வழிந்தோடுவதற்குரிய வகையில் புனரமைப்பு பணிகளை மேற்கொண்டிருந்தோம். இந்த வருடமும் மேலதிகமான நிதி ஒதுக்கீடுகளை மேற்கொண்டு அவ்வேலைத்திட்டத்தினை முழுமைப்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளோம்.
மக்களின் வாக்குகளை பெறுவதற்காக மாத்திரம் நாங்கள் இவ்வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருந்தால் அந்த நிதியினை பயன்படுத்தி குறைந்த பட்சம் 11 வீதிகளை அபிவிருத்தி செய்திருக்க முடியும். ஆனால் எங்களுடைய அபிவிருத்தி பணிகளை எங்களுடைய பிரதேசத்தின் தேவைகளை முன்னுரிமைப்படுத்தி மக்களின் நலன்கருதியே மேற்கொண்டு வருகின்றோம்.
அந்த வகையில் இப்பிரதேசத்திலுள்ள மாணவர்கள் தங்களது வீடுகளிலிருந்து கல்வி கற்பதற்கு சிறந்ததொரு சூழல் இல்லை என்ற ஒரு விடயம் இருந்த போது. அப்பிரச்சினையினை நிவர்த்தி செய்யும் முகமாக இன்று காத்தான்குடியில் மாணவர்களின் நன்மைகருதி நான்கு இடங்களில் நூலகங்களை அமைத்திருக்கின்றோம். அதன் மூலமாக எமது பிரதேசத்திலுள்ள மாணவர்கள் இரவு 9.00 மணி வரை எத்தகைய தொந்தரவுகளும் இன்றி அமைதியான ஒரு சூழலில் தமது கற்றல் நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும். அதற்கான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுப்பதற்கு நகரசபைக்கு நாம் பணிப்புரையும் விடுத்துள்ளோம்.
மேலும் காத்தான்குடி நகரசபையின் செயற்பாடுகளானது உள்ளூராட்சி சபைகள் கலைக்கப்பட்டதற்கு பிற்பாடு இக்காலப் பகுதிக்குள் மக்களுக்கு மிகவும் சிறந்ததொரு சேவையினை வழங்கக்கூடிய விதத்தில் அமைந்திருக்கின்றது. குறிப்பாக அரசியல் ரீதியான சபைகள் உள்ளபோதிருந்த நிருவாக ரீதியான பிரச்சினைகள் இன்றி நகரசபையானது சுதந்திரமாவும் மிகவும் சிறந்த விதத்திலும் தனது பணிகளை முன்னெடுத்து வருகின்றமை பாராட்டக்குரியதொரு விடயமாகும் என தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சபையின் நிதி ஒதுக்கீட்டிலிருந்து 20 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட அமானுல்லாஹ் வீதிக்கான வடிகான், 20 இலட்சம் ரூபா செலவில் கொங்றீட் வீதியாக புணரமைப்பு செய்யப்பட்ட கபூர் வீதி மற்றும் குபா வாசிகசாலை, அல்-இக்பால் வாசிகசாலை, அல்-ஹிலால் வாசிகசாலை, அப்றார் வாசிகசாலை மற்றும் காத்தான்குடி பொது நூலாக சிறுவர் பிரிவு ஆகியன இதன்போது திறந்து வைக்கப்பட்டது.
காத்தான்குடி நகரசபையின் செயலாளர் SMM.ஸபி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுகளுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் கௌரவ. அல்ஹாஜ் Z.A. நஸீர் அஹமட் அவர்களும், கௌரவ அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானா, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் ஆகியோரும், ஏனைய அதிதிகளாக மட்டு மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் சித்திரவேல், காத்தான்குடி நகரசபையின் முன்னாள் முதல்வர் மர்சூக் அஹமட் லெப்பை மற்றும் ஊர் பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.