ஏ.எச்.ஏ.ஹுஸைன்-
டெங்கு நுளம்புகள் பரவுவதை உதாசீனப்படுத்தினால் அதன் பின் விளைவாக உயிரிழப்பை எதிர்கொள்ள நேரிடும் என மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளர் எச்சரித்தார்.
மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட வெட்டுக்காடு, ஞானசூரியம் சதுர்க்கம் உள்ளிட்ட பிரதேசங்களில் மாபெரும் டெங்கு ஒழிப்பு சிரமதானம் ஞாயிற்றுக்கிழமை 26.03.2017 முன்னெடுக்கப்பட்டது.
சிரமதானப் பணியில் பங்கு கொண்டு பொதுமக்கள், குடியிருப்பாளர்கள் மற்றும் அலுவலர்கள் மத்தியில் தொடர்ந்து உரையாற்றிய ஆணையாளர் மேலும் கூறியதாவது, டெங்கு நுளம்புகள் பெரும்பாலும் கிணறுகள், நீர்த் தாங்கிகள் பூச்சாடிகள் மற்றும் வாழைமரங்கள் போன்றவற்றிலிருந்தே அதிகம் பரவுகின்றன.
டெங்கு நோய் என்பது மனிதர்களின் சோம்பேறித்தனத்தாலும் கரிசனையற்ற தன்மையாலும்தான் ஏற்படுகின்றது. ஒவ்வொருவரும் தத்தமது வீட்டுச் சூழலை சுத்தமாக வைத்திருக்கும் பொறுப்பு உள்ளது. அதேபோல் இந்த நகரத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டிய பொறுப்பு எமது மாநகர சபைக்கு உள்ளது.
அவரவர் தமது பொறுப்புக்களை திறம்பட செய்வோமானால் இந்த உயிர்க் கொல்லி டெங்கு பரவுவதை முற்றாக அழிக்க முடியும்' என்றார். இச் சிரமதானப் பணியில் சுகாதார வைத்திய அதிகாரிகள், மட்டக்களப்பு மாநகர சபை சுகாதார பிரிவு அதிகாரிகள், சுகாதார ஊழியர்கள், மாநகர சபை ஊழியர்கள் மற்றும் சமூக அமைப்புக்கள் என சுமார் 450 பேர் கலந்துகொண்டனர்.