கிழக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதற்கு இவ்வருடம் மாகாண சபையினால் கூடுதலான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நஸீர் தெரிவித்தார்.
ஒலுவில் அல்-மதீனா வித்தியாலயத்தில் 2017ஆம் ஆண்டுக்கான இல்ல விளையாட்டு விழா, கடந்த 25ஆம் திகதி மாலை கே.எல். அமீர் தலைமையில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
“நல்லாட்சி அரசாங்கம் மாகாண சபைகளுக்கு சுகாதாரம், கல்வி போன்றவற்றை அபிவிருத்தி செய்வதற்கு கூடுதலான நிதியினை ஒதுக்கீடு செய்துள்ளது. இவ்வருடத்தில் அல்-மதீனா வித்தியாலயத்திற்கு புதிய இடத்தில் சகல வசதிகளும் கொண்ட மூன்று மாடிக் கட்டடம் நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஒரு பாடசாலையின் வளர்ச்சி மற்றும் கல்வி முன்னேற்றத்தில் பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்களுடன் பெற்றோர்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். அவ்வாறு செயற்படும் போது நாங்கள் எல்லோரும் எதிர்பார்க்கின்ற சிறந்த கல்விச் சமுதாயமொன்றை உருவாக்க முடியும். தற்போதைய சூழ்நிலையில் பெற்றோர்கள் தமது பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியை வழங்குவது அவசியமாகும். பாடசாலையில் பிள்ளைகளை சேர்த்து விட்டால் மாத்திரம் போதாது, பாடசாலையுடன் பெற்றோர்கள் தொடர்புடையவர்களாக இருக்க வேண்டும்” என்றார்.