எந்த இலக்கையும் அடையாளம் காணாமல் அல்லது சமுகத்தின் மொத்த நன்மைக்காக எங்களின் தனிப்பட்ட அடையாளங்களை கழைந்து விட்டு ஒரு பொது அடையாளத்தின் கீழ் வருவதற்கும் ஆயத்தமில்லாத கூட்டமைப்பைப் பற்றிப் பேசுகின்றோம் என்றால் அது என்ன வகையான முஸ்லிம் கூட்டமைப்பு ? என்று சட்டத்தரணி வை.எல்.எஸ்.ஹமீட் கேள்வி எழுப்பியுள்ளார்.
முஸ்லிம் கூட்டமைப்பு தொடர்பாக அவர் மேலும் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது,
இன்று முஸ்லிம் கூட்டமைப்பு தேவை பற்றி பரவலாகப் பேசப்படுகின்றது. அதே நேரம் சிலர் அது சாத்தியம் என்றும் சிலர் அது சாத்தியமில்லை என்றும் அது சாத்தியமில்லை ஆனாலும் அதனை சாத்தியமாக்குவதற்கான யூகங்கள் வகுக்கப்பட்டு அது முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற கருத்தையும் முன்வைக்கின்றார்கள். முஸ்லிம் கூட்டமைப்பொன்று அவசியமானால் அந்த அவசியத்தை ஏற்படுத்துகின்ற காரணிகள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றனவா? அந்தக் காரணிகளை உருவாக்கிய காரணங்கள் அடையாளம் காணப் பட்டிருக்கின்றனவா? இந்தக் கூட்டமைப்பு அடைய எத்தனிக்கும் இலக்கு அல்லது இலக்குகள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றனவா? அதாவது, அந்தக் காரணங்களை இந்தக் கூட்டமைப்பு முழுமையாக இல்லாமலாக்குமா? அல்லது அந்தக் காரணிகளின் எந்த மட்டத்தை இல்லாமலாக்கும் . அல்லது நிறைவு செய்யும். என்ற கேள்விகள் இங்கு எழுகின்றன.
கூட்டமைப்பு என்பதன் அடிப்படை நோக்கம் ஒற்றுமை அல்லது பிரிந்து செயற்படுபவர்கள் ஒன்றுபட்டு செயற்படுவது என்பதாகும். அதாவது, அரசியலில் நீண்ட காலம் அல்லது இடைப்பட்ட காலம் அல்லது குறுகிய காலம் ஒன்றுபட்டு செயற்படுவதாகும். ஆனால் நிரந்தரமாக ஒன்றுபட்டு செயற்படுவதல்ல. ஏனெனில் அரசியல் கூட்டமைப்பு என்பதன் பொருள் தாங்கள் தாங்களாகவே இருந்து கொண்டு குறித்த இலக்கை அடைவதற்காக ஒன்றுபடுவதே. தாங்கள் தாங்களாக என்பதன் பொருள் தங்கள் கட்சிகள் அல்லது கட்டமைப்புக்கள் அவ்வாறே இருக்க அந்தக் கட்சிகள் அல்லது கட்டமைப்புக்கள் ஒன்று சேர்வது. இது சில நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து ஒரு சம்மேளனத்தை அமைப்பது போன்றதாகும். அச்சம்மேளனத்தில் இணைவதன் மூலம் எந்தவொரு நிறுவனமும் தன்னை இழந்து விடுவதில்லை. மாறாக தன்னுடைய செயற்பாடுகளில் சிலவற்றைக் கூட்டாக செய்வதாகும்.
அவ்வாறு இல்லாமல் சேருவதாக இருந்தால் அதற்கு கூட்டமைப்பு என்று பெயர் வராது. மாறாக அது ஒரு புதிய கட்சி என்று வர வேண்டும். இங்கு முயற்சிக்கப்படுவது புதிய கட்சியா? அல்லது கூட்டமைப்பா? கூட்டமைப்பு என்ற சொல்லுக் குள்ளேயே நிரந்தரமற்றது என்ற பொருள் பதிந்திருக்கின்றது.
கூட்டமைப்புக்களை மூன்று வகையான பிரிக்கலாம். ஒன்று ஒரு நீண்ட இலக்கைக் கொண்டது. உதாரணம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அவர்களுக்கு ஒரு நீண்ட அடையாளம் காணப்பட்ட இலக்கு இருக்கின்றது. அதுதான் தமிழர்கள் தங்களைத் தாங்களே ஆழ்வதற்கான ஒரு சுயாட்சி அலகைப் பெறுவது. இவ்வாறான ஒரு நீண்ட இலக்கு முஸ்லிம்களுக்காக அடையாளம் காணப்பட்டிருக்கின்றதா? அவ்வாறாயின் அது என்ன? அந்த இலக்கினை அடைவதற்காகவா பிரிந்து நிற்கின்ற முஸ்லிம் அரசியல் சக்திகளை ஒன்றிணைத்து ஒரு கூட்டமைப்பு ஏற்படுத்துவதற்கு முயற்சிக்கப்படுகின்றது.
இரண்டு, இடைக்கால இலக்கு, உதாரணம் தேர்தல் கூட்டமைப்புக்கள் அதாவது, ஐக்கிய தேசியக் கட்சி, சி.ல.சு.கட்சி, போன்றவை தேர்தல் கூட்டமைப்புக்களை அவ்வப்போது ஏற்படுத்துகின்றன. இவற்றின் நோக்கம் தேர்தல்களில் அதிகூடிய ஆசனங்களைப் பெறுவதும் சாத்தியமானால் ஆட்சியமைப்பதும் (சி.ல.மு.கா. கட்சியும், அ.இ.ம .கா. கட்சியும் பதுளை தேர்தலில் ஒன்றிணைந்ததும் ஒரு தேர்தல் கூட்டமைப்பே.)
மூன்றாவது குறிப்பிட்ட ஒரு சில விடயங்களுக்காக மட்டும் ஒன்று சேர்ந்து செயற்படுவது.! அதாவது, (Issue based alliance/ unity) உதாரணமாக அரசியலமைப்பு மற்றும் அதிகாரப் பரவலாக்கலில் ஒரு பொது நிலைப்பாட்டை எடுப்பதற்காகவும் அந்த நிலைப்பாட்டை அடைவதற்காகவும் ஒன்றுபடுவது,
இந்த 3 வகையான கூட்டமைப்பும் இலக்குகள் கொண்டதாகும். இன்று கூட்டமைப்புப் பற்றி பேசுகின்றவர்கள் இந்த இலக்கில் ஏதாவது ஒன்றை அடையாளம் கண்டிருக்கின்றார்களா? அந்த இலக்கினை அடைவதற்காகவா முஸ்லிம் கூட்டமைப்பினைப் பற்றிப் பேசுகின்றார்கள். அல்லது இந்த மூன்றிற்கும் அப்பால் 4 வது ஒன்று இருக்கின்றதா? அவ்வாறாயின் அது என்ன?
4 வது இருப்பதற்கு சாத்தியமானது தங்களது தனிப்பட்ட கொள்கைகள் கட்டமைப்புக்கள் அனைத்தையும் விட்டு விட்டு முஸ்லிம் சமுதாயத்தின் மொத்த நன்மைக்காக ஒன்றுபடுவது, அவ்வாறு ஒன்றுபட்டால் அது கூட்டமைப்பாக இருக்க முடியாது. அது ஒரு புதிய அல்லது தனிக் கட்சியாகத்தான் இருக்க முடியும்.
இன்று இருக்கின்ற ஒவ்வொரு கட்சியும் அடுத்த கட்சியை பிழை கூறியே உருவானவை. இன்றும் அவ்வாறு பிழை கூறியே தொடர்ந்தும் அரசியல் செய்பவை. எனவே அவை அனைத்தும் கடந்த காலங்களை மறப்போம், பிழைகளை மன்னிப்போம் அனைவரும் சமுதாய நன்மைக்காக ஒன்றிணைந்து ஒரு தகுதியான ஒற்றைத் தலைமைத்துவத்தின் கீழோ அல்லது ஒரு பொருத்தமான கூட்டுத் தலைமைத்துவத்தின் கீழோ செயற்படுவோம். என்ற நிலைப்பாட்டிற்கு வந்தால் அது முஸ்லிம்களின் பொது நன்மைக்காக ஒரு நிரந்தர ஒற்றுமையை நோக்கியதாகும்.
அவ்வாறாயின் தங்கள் தனிக் கட்சிகளை அல்லது கட்டமைப்புக்களை வைத்துக் கொண்டு இணைய முடியாது. அவற்றை வைத்துக் கொண்டு இணைவதாயின் நாங்கள் நாங்களாகவே இருந்து கொண்டு தான் இணைகின்றோம். ஒன்று குறித்த இலக்கை அடைந்ததன் பின்னர் அல்லது தேவைப்பட்டால் அதற்கு முன்னர் பிரிந்து செல்வதற்கு தயாராக இருக்கின்றோம் என்ற நிச்சயமற்ற தன்மையை ஆரம்பத்திலேயே மறைமுகமாக பிரகடனப்படுத்துவதற்குப் பெயர் தான் கூட்டமைப்பாகும்.
எனவே நாங்கள் மேற்சொன்ன இலக்கையும் அடையாளம் காணாமல் அல்லது சமுகத்தின் மொத்த நன்மைக்காக எங்களின் தனிப்பட்ட அடையாளங்களை கழைந்து விட்டு ஒரு பொது அடையாளத்தின் கீழ் வருவதற்கும் ஆயத்தமில்லாத கூட்டமைப்பைப் பற்றிப் பேசுகின்றோம் என்றால் அது என்ன வகையான கூட்டமைப்பு ? ஒரு சிலரைப் பிழையானவர்கள் என்று அடையாளம் கண்டு அவர்களை வீழ்த்துவதற்கு இன்னும் சில பிழையானவர்கள் மற்றும் பிழையானவர்களின் பிழைகளினால் பாதிக்கப்பட்டவர்கள் ஒன்று சேர்ந்து சமுக இலக்கு எதுவுமில்லாமல் தாங்கள் அடைய முடியாமல் போன அல்லது அடைய எதிர்பார்க்கின்ற பதவிகளைப் பெறுவதற்காக ஏற்படுத்தப் போகின்ற கூட்டமைப்பா?
இந்தக் கூட்டமைப்பு சிலருக்கு பதவிகளுக்காகவும், சிலருக்கு மற்றவர்களை வீழ்த்துவதற்காகவும், இன்னும் சிலருக்கு தன்னை உயர்த்துவதற்காகவும் என்ற தன்னிலை நோக்கிய ஒரு முன்னெடுப்பானால் முஸ்லிம் சமுதாயம் இதுவரை ஏமாற்றப்பட்டது போதாது; என்று அதை விட பல மடங்கு ஏமாற்றுவதற்கான ஒரு முன்னெடுப்பாகவே அது இருக்க முடியும். எனவே யாரையும் யாரும் ஏமாற்ற முற்பட வேண்டாம். கூட்டமைப்பு என்ற கவர்ச்சிகரமான சொல்லுக்குள் அப்பாவித் தனமாக அறியாதவர்கள் பலியாகி விடவும் வேண்டாம். மாறாக கூட்டமைப்பைப் பற்றிப் பேசுபவர்கள் அந்தக் கூட்டமைப்பு முதலில் அடைய எதிர்பார்க்கின்ற இலக்கைப் பற்றிப் பேசுங்கள். அந்த இலக்கை அடையாளம் கண்ட பின் கூட்டமைப்பைப் பற்றிப் பேசுங்கள். போகின்ற இடம் தெரியாது வாகனம் ஹயர் பண்ண முயற்சிக்க வேண்டாம். அல்லது எல்லோரும் கடந்த கால தவறுகளுக்காக மன்னிப்புக் கேட்டு இறைவனிடத்தில் தெளபா செய்து தனித்தனி அமைப்புகளையெல்லாம் கலைத்து விட்டு ஒரு புதிய தனி அமைப்பாக இஹ்லாசுடன் ஒற்றுமையாக செயற்பட முன்வாருங்கள். அதற்கு ஆயத்தமில்லை என்றால் அவரவர் அவரவரது அரசியலைச் செய்யுங்கள். அது குழி பறிப்பு அரசியலா? நேர்மையான அரசியலா ? என்பதை சமுகம் தீர்மானிக்கட்டும். சமுகம் திருந்தாத வரை ஒரு போதும் நேர்மையான அரசியலை எந்தக் கட்சியிடமிருந்தோ, எந்தக் கூட்டமைப்பிடமிருந்தோ எதிர்பார்க்க முடியாது. இன்றைய சமுக வலைத்தளங்களில் பலராலும் இடப்படுகின்ற பதிவுகள் சமுகம் திருந்து வதற்கு இன்னும் நாட்கள் இருக்கின்றன என்ற சமிக்ஞையைத் தான் வழங்கிக் கொண்டிருக்கின்றது.
ஆகக் குறைந்தது இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் றமழான் மாதத்திலாவது கடந்தகால பிழையான அரசியல் தலைமைத்துவங்களும்/ பிரதிநிதித்துவங்ஙளும் மற்றும் பிழையான தலைமைத்துவங்கள்/ பிரதிநிதித்துவங்கள் உருவாவதற்கு செய்த பங்களிப்புகளுக்காக நாம் எல்லோரும்்இறைவனிடத்தில் தெளபா செய்து எதிர்காலத்தில் நெஞ்சுரமும், நேர்மையும், சமுக வாஞ்சையுமுள்ள தலைமைத்துவங்களையும் பிரதிநிதித்துவங்களையும் தெரிவு செய்ய மொத்த சமுகமும் திடசங்கற்பம் பூண முடியுமானால் இறைவன் சிறந்த தலைமைத்துவத்தையும் பிரதி நிதித்துவங்களையும் சமுகத்திற்கு தருவான் என்றும் குறிப்பிட்டுள்ளார்.