மினுவாங்கொடை நிருபர்-
எல்லை நிர்ணய மேன் முறையீட்டுக் குழுவின் அறிக்கையிலுள்ள தொழில் நுட்பக் குறைபாடுகள் யாவும் திருத்தப்பட்ட நிலையில், அதனை வர்த்தமானியில் பிரசுரிப்பதற்காக (17) வெள்ளிக்கிழமை மாலை, அரசாங்க அச்சகத்தில் ஒப்படைக்கப்பட்டதாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
எல்லை நிர்ணய அறிக்கையை, அமைச்சர் பைஸர் முஸ்தபா, அமைச்சின் செயலாளர் கமல் பத்ம சிறியிடம் கையளித்தார்.
அமைச்சர் இங்கு கருத்துத் தெரிவிக்கும்போது குறிப்பிட்டதாவது ;
"வர்த்தமானியில் பிரசுரிப்பதற்காக என்னால் இன்று ஒப்படைக்கப்பட்டுள்ள அறிக்கையில், எந்தவொரு பிழையோ அல்லது தவறோ இல்லை என்பதை, உறுதியாகக் கூறிக் கொள்ள விரும்புகின்றேன். வர்த்தமானியில் பிரசுரிப்பதற்காக, அதனை ஒப்படைப்பது மாத்திரமே தனது பொறுப்பாகும். ஆனால், பிரசுரமாகும் திகதியை, என்னால் திட்ட வட்டமாகக் கூறமுடியாது. எனினும், அடுத்த வாரம் 24ஆம் திகதி வெள்ளிக் கிழமையளவில் வெளியாகும் வர்த்தமானி அறிவித்தலை எதிர்பார்க்க முடியும் எனவும் நான் நம்புகிறேன்.
இதேவேளை, வர்த்தமானி அறிவித்தல் வெளியான பின்னர், எவ்வேளையிலும் உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகலாம். எனவே, இது தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கையாக நாடாளுமன்றம், தேர்தல் ஆணைக் குழுவின் தவிசாளர், கட்சித் தலைவர்கள் ஆகியோரே தீர்மாங்களை எடுக்க வேண்டும்.
ஆகவே, இத் தருணத்தில் சகல அரசியல் கட்சிகளும், பொது மக்களும் கட்சி பேதங்களைக் களைத்தெறிந்து, நேர்மையான முறையில் செயற்படுவதே தன்னுடைய நோக்கமாகும். இத் தேர்தலை, காலம் தாழ்த்தும் நோக்கம் எதுவும், ஜனாதிபதிக்கோ பிரதமருக்கோ அல்லது அரசாங்கத்திற்கோ கிடையாது" என்றும் அமைச்சர் இதன்போது திட்ட வட்டமாகத் தெரிவித்தார்.
எல்லை நிர்ணயத்தை மேற்கொள்ள நியமிக்கப்பட்டிருந்த அசோக்க பீரிஸ் தலைமையிலான குழு, ஜனவரி 17ஆம் திகதி எல்லை நிர்ணய அறிக்கையை, அமைச்சர் பைஸர் முஸ்தபாவிடம் கையளித்திருந்தது. சுமார் ஒரு வருட காலமாக மிக நீண்ட இழுபறிக்கு மத்தியில் காணப்பட்ட எல்லை நிர்ணயம் தொடர்பிலான பணிகள் யாவும் பூர்த்தி செய்யப்பட்ட நிலையில், இந்த அறிக்கை, (17) வெள்ளிக்கிழமை மாலை அரசாங்க அச்சகத்திடம் வர்த்தமானியில் பிரசுரிப்பதற்காக கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.